லடாக்கில் சீனா ஊடுருவலே இல்லை என பொய் சொல்லி ராணுவ வீரர்களை அவமதித்தவர் மோடி: ராகுல்
பாட்னா: லடாக்கில் சீனா ஊடுருவலே இல்லை என பொய் சொல்லி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை அவமதித்துவிட்டார் பிரதமர் மோடி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி இன்று பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது புல்வாமா தாக்குதலில் பீகாரை சேர்ந்த ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள். அப்படிப்பட்ட காஷ்மீரில் மீண்டு 370வது பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இது பீகார் மக்களை அவமதிப்பதாகும் என்றார்.
பிரதமர் மோடியின் பீகார் வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான #GoBackModi
வேலைவாய்ப்பு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீகாரின் ஹூசுவா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த தேர்தலின் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார் பிரதமர் மோடி. ஆனால் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
ராணுவ வீரர்களுக்கு அவமரியாதை
லடாக்கில் சீனா ஊடுருவியது. நமது நிலத்தில் 1,200 கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவே இல்லை என்கிறாரே மோடி. லடாக்கில் வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களை அவமானப்படுத்துகிறார் மோடி. லடாக்கில் ஆக்கிரமித்திருக்கும் சீனாவை எப்போது விரட்டியடிப்பீர்கள்? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்.
வங்கி கணக்கில் பணம் வந்ததா|
பிரதமர் மோடி அறிவித்தது போல உங்களது வங்கி கணக்குகளில் பணம் போடப்பட்டதா? அந்த பணம் பணக்காரர்களின் பாக்கெட்டுகளில் போடப்பட்டுவிட்டது. கறுப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக உங்களிடம் சொன்னார்களே.. என்றைக்காவது அதானி கியூ வரிசையில் நின்று பார்த்திருக்கிறீர்களா? ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு மக்களை பணக்காரர்களாக்கப் போவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
விவசாய விரோத சட்டங்கள்
இப்போது தேர்தல் களத்தில் நின்று கொண்டு ராணுவ வீரர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு தலைவணங்குகிறேன் என்கிறார் மோடி. ஆனால் வீட்டுக்கு போனதும் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மட்டும் பணியாற்றுவார். இந்த தேசத்தின் விவசாயிகளையும் சிறு வர்த்தகர்களையும் புறக்கணித்துவிட்டனர். இப்போது 3 விவசாய விரோத சட்டங்களை பிரதமர் மோடி அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.