இங்க பாருங்க.. பீகாரில் தடுப்பூசி செலுத்தியவர்கள் லிஸ்டில் மோடி, பிரியங்கா சோப்ரா பெயர்கள்
பாட்னா : பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல முக்கியஸ்தர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ள அர்வால் மாவட்ட நிர்வாகம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மெல்ல, மெல்ல ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரான் வைரஸ்..குஜராத்தில் மேலும் 2 பேருக்கு அறிகுறி
தடுப்பூசி அப்டேட்
நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் பட்டியல் ஆதார் உள்ளிட்ட விவரங்களுடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எத்தனை பேர் முதல் டோஸ் போட்டார்கள், 2வது டோஸ் போட்டார்கள் என்ற விவரங்கள் நாளுக்கு நாள் பதிவேற்றி அந்த எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் முதல் டோஸ் 80,02,01,272 போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 47,91,08,397 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1,27,93,09,669 டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் முதல் டோஸ் 8,71,547 இரண்டாவது டோஸ் 15,84,364 ஆக மொத்தம் 24,55,911 டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 4,64,89,016 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 2,68,26,690 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 7,33,15,706 டோஸ் போடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தடுப்பூசி செலுத்தினார்
நாட்டு மக்களுக்கு கொரோனவுக்கு எதிரான தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். ஏப்ரல் 8ம் தேதி இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்திக் கொண்டார். இதே போல் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்களும் தடுப்பூசி அவர்களுடைய இருப்பிடங்களில் போட்டுக்கொண்டனர்.
பிரபலங்களின் பெயர்கள்
இந்நிலையில் பீகார் மாநிலம் அர்வார் மாவட்டம் கர்பி கிராமத்தின் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் பட்டியல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பட்டியலில் நரேந்திர மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, பிரியங்கா சோப்ரா மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியல் கொண்ட வீடியோ வைரல் ஆனதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த பட்டியல் எப்படி தயாரிக்கப்பட்டது, யாருடைய உத்தரவின்பேரில் இதுபோல் பதிவிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட நீதிபதி ஜே.பிரியதர்ஷினி கூறினார்.
Recommended Video
மாவட்ட நிர்வாகம் விசாரணை
இது குறித்து தெரிவித்த மாவட்ட நிர்வாகம், இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்ற விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்று முறைகேடு பதிவுகள் இந்த கிராமத்தில் மட்டும் நடந்துள்ளதா அல்லது மற்ற இடங்களில் நடந்துள்ளதா என்று கண்காணித்து இதுபோன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டவர்கள் மிது வழக்குப் பதியப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் முதற்கட்டமாக இந்த தவறினை செய்த 2 கம்ப்யூட்டர்கள் ஆபரேட்டர்கள் நீக்கப்பட்டுள்ளனர் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே கூறுகையில், "மற்ற மருத்துவமனைகளின் பதிவேட்டுகளை ஆய்வு செய்து தவறுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும்படி கூறி இருக்கிறேன். மேலும் இதுபோன்ற தவறுகளுக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.