பீகார்: 2ம் கட்ட வாக்குப் பதிவு இடங்களில் இன்று பிரசாரம் ஓய்வு! மோடி 4 கூட்டங்களில் பங்கேற்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. பிரதமர் மோடி இன்று பீகாரில் 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
2-ம் கட்ட வாக்குப் பதிவு வரும் 3-ந் தேதி நடைபெற உள்ளது. 17 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 94 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது.
2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 34% கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டவர்கள். 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 94 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதனிடையே பிரதமர் மோடி இன்று பீகாரில் 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். சமஸ்திபூர், பஹாகா ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் மோடியுடன் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்கிறார். பீகார் தேர்தலில் 3-வது முறையாக மோடி இன்று பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.