மயிலுடன் பிரதமர் மோடி...அரசியலானது பீகாரில்...போர்கொடி உயர்த்தியது லாலு கட்சி!!
பாட்னா: மயிலுக்கு தான் உணவளிக்கும் மற்றும் வீட்டு தோட்டத்தில் நடைபயிற்சி செல்லும்போது, மயில் தோகை விரித்தாடும் வீடியோவைவும் பிரதமர் மோடி வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ நேற்று முதல் வைரலாகி வருகிறது. தற்போது இந்த மயில் வீடியோ பீகார் அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேறி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் ஷ்யாம் ராஜாக் என்பவர் ஐக்கியம் ஆகியுள்ளார். இவர் அளித்திருக்கும் பேட்டியில், ''கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு இரண்டு மயில்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த பாஜகவினர், மயில் ஆபத்தான பறவை என்றும் வீட்டு விலங்காக வளர்க்கக் கூடாது என்றும் எனவே இது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறு என்றும் பாஜக தெரிவித்து இருந்தது. மேலும், இதன் அடிப்படையில் லாலு குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமலாக்குவது ஒவ்வொருவரின் கடமை. முக்கியமாக பிரதமரின் கடமை. இதை விளம்பரத்துக்காக பிரதமர் பயன்படுத்துகிறார்'' என்றும் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ''இந்தப் புகைப்படம் தவறானது. நம்முடைய பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. தினமும் 1000 கணக்கில் கொரோனாவுக்கு மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தினமும் 70,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது பார்த்து பிரதமர் மோடி இந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது எப்படி இருக்கிறது என்றால், ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார்.. காரிய கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு முடிவு!
பீகாரில் 2017ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தபோது, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் இருந்தார். வீட்டில் மயில் இருந்தால் அதிருஷ்டம் என்று சாமியார் ஒருவர் கூறியதால், 10, சர்குலர் சாலை, பாட்னாவில் இருக்கும் தங்களது வீட்டுக்கு இரண்டு மயில்களை வனத்தில் இருந்து கொண்டு வந்து வளர்த்துள்ளனர். இது லாலுவின் விருப்பம் என்றும் கூறப்பட்டது.
இதை அப்போதைய வனத்துறை அதிகாரிகளும் ஆதரித்து இருந்தனர். முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் மயில்களை வளர்த்தால், பூச்சிகள் கொல்லப்படும். சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று தெரிவித்து இருந்தனர். ஆதலால், இந்த பகுதியில் 100 மயில்களை விடப்போவதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து, மயில்களை சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாக லாலு தெரிவித்து இருந்தார். அப்போதுதான் மான் கொன்றதாக நடிகர் சல்மான் கான் மீது சுமத்தப்பட்டு இருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க லாலு அவ்வாறு சொன்னதாக கூறப்பட்டது. இப்போது பிரதமர் நோக்கி விரல் காட்டப்படுகிறது.
பிரதமர் மோடி வனவிலங்குகள் மற்றும் இயற்கையை விரும்புவதால், வீட்டில் மயில் வைத்து இருக்கிறார் என்று பீகார் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ரஜ்னி ரஞ்சன் ஆதரித்துள்ளார்.