ஓவைசியை ஓவர்டேக் செய்யும் பி.கே! தேஜஸ்வியின் அண்ணன் வேற.. வாக்குகளை பிரிப்பதால் களம் மாறும் பீகார்
பாட்னா: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சீமாஞ்சல் பகுதியில் அசாதுதீன் ஓவைசியின் கட்சி வாக்குகளை பிரிப்பதாக மகாபந்தன் கூட்டணி புலம் வரும் நிலையில், மற்ற பகுதியில் பிரசாந்த் கிஷோரும், தேஜஸ்வியின் அண்ணனும் இதே வேலையை பார்ப்பதாக கூட்டணி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் எனில் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்டிஏ கூட்டணி, மகாபந்தன் கூட்டணி, ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. இது இல்லாமல் கிராண்ட் டெமாக்ரடிக் கூட்டணியும் களத்தில் இருக்கிறது.

என்டிஏ கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல மகாபந்தன் கூட்டணியில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விகாசீல் இன்சான் கட்சி ஆகியவை களத்தில் இருக்கின்றன.
இந்த கூட்டணியில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்காமலேயே தேர்தலை எதிர்கொள்ள தொடங்கியது. மட்டுமல்லாது இதற்கு முன்னர் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்தால், பாஜகவுக்கு குறைவான தொகுதிகளும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு அதிக தொகுதிகளும் ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதன் மூலம் நிதிஷ்குமாரை ஓரம் கட்ட பாஜக முடிவு செய்துவிட்டது என்று பேசப்பட்டது. இதனையடுத்து வேறு வழியின்றி நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதாக அமித்ஷா அறிவித்தார்.
மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதம் காரணமாக தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. காங்கிரஸுக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் தொடங்கி பல இடங்களில் முட்டல் மோதல்கள் எழுந்தன. மட்டுமல்லாது தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாமல், நட்பு போட்டி என்று சொல்லி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது. 2014ல் இருந்து அதிகாரத்தை பிடிக்க முடியாமல் வீழ்த்தப்பட்டிருக்கும் காங்கிரஸுக்கு இந்த 'நட்பு முரண்' போட்டி எல்லாம் தேவைதானா கோபி? என்று பலரும் கலாய்த்து இருந்தனர்.
இந்த பஞ்சாயத்துகள் போதாது என்று மகாபந்தன் கூட்டணியின் வாக்குகளை பிரிக்க மூன்று தலைவர்கள் களமிறங்கியுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் உள்ள 24 தொகுதிகளில் ஓவைசி தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். இது வாக்குகளை பிரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் வாக்குகளை பிரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எக்ஸிட் போல் முடிவுகளின்படி ஜன் சுராஜ் கட்சி காங்கிரஸை விட அதிக வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டிருக்கும் எக்சிஸ்ட் போல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 46.2% வாக்குகளும், மகாபந்தனுக்கு 37.9% வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 23.3% வாக்குகளுடன் அதிக வாக்கு சதவீதத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி (BJP) 21.4% வாக்குகளையும், ஜனதா தளம் (யுனைடெட்) (JDU) 17.6% வாக்குகளையும் பெறும். ஜன் சுராஜ் கட்சிக்கு 9.7% வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 8.7% வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபேல மஹுவா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வாக்குகளை, தேஜஸ்வி யாதவ் அண்ணன், தேஜ் பிரதாப் யாதவ் பிரிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தேஜ் பிரதாப் ராஷ்டிரிய ஜனதா தளத்தில்தான் களமிறக்கப்பட்டார். ஆனால், அவருடைய நடத்தை காரணமாக கட்சியிலிருந்த நீக்கப்பட்டார். எனவே ஜனசக்தி ஜனதா தளம் என்கிற புதிய கட்சியை தொடங்கி அவர் மஹுவா தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இவர் கடந்த 2015ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
எனவே இந்த முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சிட்டிங் எம்எல்ஏவான முகேஷ் குமாரை எதிர்த்து தேஜ் பிரதாப் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இருவரும் வெற்றி பெறப்போவதில்லை. மாறாக பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். காரணம் இருவருக்கும் இடையேயான சண்டையில் வாக்குகள் பிரியும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications