பிரியங்கா காந்தி அழகா இருக்காரு.. பாஜக அமைச்சரின் 'அழுக்கு' கமெண்ட்
பாட்னா: பிரியங்கா காந்தி முகம் அழகானது தான், ஆனால் அவருக்கு திறமை கிடையாது என்று பீகார் மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஷா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி முதல் முறையாக அரசியல் பிரவேசம் செய்துள்ளார். அவரை உத்தரபிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக காங்கிரஸ் கட்சி இரு தினங்களுக்கு முன்பாக நியமித்துள்ளது.
பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம், காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் கொடுத்துள்ளது பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை, காங்கிரஸ் ஒத்திப் போடும் அளவுக்கு, அவர்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்தவரும், பீகார் மாநில அமைச்சருமான வினோத் நாராயண் ஷா, தெரிவித்துள்ள ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அழகான முகத்தை வைத்து வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. மேலும் பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேராவின் மனைவியாகும்.
பல்வேறு நிலமோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ராபர்ட் வதேரா. பிரியங்கா காந்தி ரொம்பவே அழகாக இருக்கிறார். ஆனால் அவர் இதுவரை அரசியலில் எந்த சாதனையும் செய்யவில்லை. எந்த திறமையையும் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.