பீஹார் அரசியலில் மையம் கொள்ளும் லண்டன் பெண்... யார் இந்த புஷ்பம் பிரியா...?
பாட்னா: பீஹார் அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மையம் கொண்டுள்ளார் லண்டன் வாழ் பீஹாரி புஷ்பம் பிரியா சவுத்ரி.
கடந்த ஞயிற்றுக்கிழமையன்று பீஹார் மாநிலத்தில் வெளிவந்த அனைத்து நாளிதழ்களிலும் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தி புஷ்பம் பிரியா அளித்திருந்த விளம்பரம் டெல்லி வரை எதிரொலித்திருக்கிறது.
இந்நிலையில் புஷ்பம் பிரியா யார், அவரது அரசியல் பிரவேசதுக்கான பின்னணி என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆபரேஷன் கமலா இல்லை.. இது ஆபரேஷன் சிந்தியா.. ம.பியில் புயலை கிளப்பும் ஜோதிராதித்யா.. பரபர பின்னணி!
அரசியல் பின்புலம்
பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பல்பத்ரபூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட புஷ்பம் பிரியா சவுத்ரி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவரது அப்பா, தாத்தா என அனைவரும் பீஹார் அரசியலில் கோலோச்சியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பம் பிரியா சவுத்ரியின் அப்பா வினோத் சவுத்ரி ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் எம்.எல்.சி (சட்டமேலவை உறுப்பினராக) இருந்திருக்கிறார். மேலும், புஷ்பம் பிரியாவின் தாத்தா உமாகாந்த் சவுத்ரி நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். நிதிஷ்குமார் அரசியலுக்கு வந்த புதிதில் புஷ்பம் பிரியாவின் தாத்தா உமாகாந்த் சவுத்ரி தான் அவருக்கு அரசியல் வழிகாட்டியாக விளங்கினார்.
நிராகரிப்பு
தனது நண்பரின் மகனான வினோத் சவுத்ரியை (அதாவது புஷ்பம் பிரியாவின் அப்பாவை) நிதிஷ்குமார் பலமுறை அரசியலுக்கு அழைத்தும் அவர் ஒரே ஒரு முறை எம்.எல்.சி. யாக மட்டும் இருந்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். பேராசிரியரான வினோத் சவுத்ரி தனது மகள் புஷ்பம் பிரியாவை உயர்கல்வி படிப்பதற்காக லண்டன் அனுப்பி வைத்தார். அங்கு சென்ற புஷ்பம் பிரியா லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பொதுநிர்வாகத்துறை முடித்தார். மேலும், தான் பிறந்த பீஹார் மாநிலம் வறுமையிலும், வறட்சியிலும் தவிப்பதை பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை பதிவிட்டு வந்தார்.
வருவாய்
பீஹார் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த நிதிஷ்குமார் தவறிவிட்டதாகவும், இதனால் தான் பீஹாரிகள் கொத்தடிமைகளாக பல மாநிலங்களுக்கு சென்று வேலைபார்த்து வருவதாகவும் கருதினார் புஷ்பம். இந்நிலையில் புளூரல்ஸ் என்ற கட்சியை அறிமுகம் செய்துள்ள அவர், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தாம் தான் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீஹார் நாளிதழ்களில் இரண்டு முழு பக்க விளம்பரம் கொடுத்திருந்தார். நித்ஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் முகாம்களுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த விளம்பரம்.
கல்வியறிவு
அடுத்து வரும் 10 ஆண்டுகளில் பீஹார் மாநிலத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்பதே புஷ்பம் பிரியா சவுத்ரியின் முழக்கமாக உள்ளது. பீஹார் மக்களை 100 % கல்வியறிவு பெற்றவர்களாக கொண்டு வரவும், வறுமையை ஒழித்து போதிய வருவாய் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தவும் தன்னிடம் பல நல்ல திட்டங்கள் உள்ளதாக பரப்புரையை தொடங்கியுள்ளார் புஷ்பம் பிரியா சவுத்ரி. இவரது அரசியல் வருகை தங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் நம்பிக்கை.
புதியவர்கள்
பீஹாரில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் புஷ்பம் பிரியா சவுத்ரி பின்னால் அணிவகுத்திருப்பது அங்கிருக்கும் பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே புளூரல்ஸ் கட்சியின் கொள்கை, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட எதைப் பற்றியும் புஷ்பம் வெளியிடவில்லை. தற்போது லண்டனில் இருந்தவாறே தன்னை பீஹார் முதல்வர் வேட்பாளராக புஷ்பம் பிரியா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் ஏற்படுத்திய தாக்கமும், அதற்கு இருந்த வரவேற்பும் நல்ல முறையில் இருந்ததால் புஷ்பம் விரைவில் பீஹார் திரும்ப உள்ளார்.