மருமகளை சித்ரவதை செய்த முன்னாள் முதல்வர்... பாரபட்சமின்றி பாய்ந்தது வழக்கு
பாட்னா: மருமகளை கொடுமைப்படுத்திய புகாரில் பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
முதலமைச்சராக பதவி வகித்தும் சொந்த மருமகளை கூட நல்ல முறையில் வைத்துக்கொள்ள முடியாதவர் ராப்ரி தேவி என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, தனது கணவருடன் தாம் சேர்ந்து வாழ முடியாத வகையில் மாமியார் ராப்ரிதேவியும், நாத்தனார் மிசா பாரதியும் தனக்கு இடையூறு கொடுப்பதாக ஐஸ்வர்யா ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி தனது மருமகளை கொடுமைப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழலில் லாலு சிறையில் உள்ள நிலையில், மருமகளை சித்ரவதை செய்த விவகாரத்தில் அவரது மனைவி மீதும் போலீஸ் பிடி இறுகியுள்ளது.
மூத்த மருமகள்
லாலு -ராப்ரிதேவி தம்பதியின் மூத்த மகனான் தேஜ் பிரதாப்புக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஐஸ்வர்யா ராய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்றே மாதங்களில் மனப்பொருத்தம் இல்லை எனக் கூறி தேஜ் பிரதாப் விவாகரத்து முடிவெடுத்தார். அவரிடம் லாலு உள்ளிட்ட பல ஆர்.ஜே.டி. தலைவர்கள் பேசியபோது மனநோயாளியை போல் நடந்துகொண்டதுடன் கட்சியிலும் தனது தம்பிக்கு எதிராக செயல்படத் தொடங்கினார் தேஜ் பிரதாப்.
சித்ரவதை
இந்நிலையில், லாலு குடும்பத்தில் இருந்து வெளியேற மறுத்து அங்கேயே தங்கியிருந்தார் மூத்த மருமகள் ஐஸ்வர்யா ராய். அப்போது தனக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் தாய் வீட்டிற்கு செல்லுமாறு, ராப்ரிதேவியும் அவரது மகள்களும் வற்புறுத்தியதாக கடந்த செப்டம்பரில் புகார் கூறியிருந்தார் ஐஸ்வர்யா. மேலும், தலைமுடியை பிடித்து இழுத்து வீட்டை விட்டு வெளியேறக் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தீவிர விசாரணை
இதனிடையே முன்னாள் முதல்வர், பெரிய அரசியல் கட்சித் தலைவரின் மனைவி என்பதையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு ஆக்ஷனில் இறங்கியுள்ளது பீகார் போலீஸ். ராப்ரிதேவி மீது மருமகளை கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள்
ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழலில் சிறையில் இருக்கிறார் லாலு. இந்த நேரத்தில் அவரது மகனும், மனைவியும் வீட்டிற்கு வந்த மருமகளை நல்ல முறையில் வைத்துக்கொள்ளாமல் அவரை விரட்டியடிக்க முயற்சி செய்தது ஆர்.ஜே.டி. கட்சிக்கு கடும் பின்னடைவை தந்துள்ளது. சொந்த மருமகளையே கொடுமைப்படுத்தும் தலைவர், மக்களை எப்படி பார்த்துக்கொள்வார் என கேள்வி எழுப்பி பரப்புரை மேற்கொள்கின்றனர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்.