பக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்
நிதிஷ்குமார், பிரதமர் மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை கிண்டலடித்துப் பேசினார்.
பாட்னாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், பிரதமர் மோடி எங்களை பக்கோடா செய்யச் சொல்கிறார் என்று உரக்கக் கத்தினார். அப்போது ராகுல் காந்தி வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த தொண்டர் கூறியதைக் கேட்ட ராகுல் காந்தி, அடுத்த தடவை செய்தால் அதை கொண்டு வந்து பிரதமருக்கும், நிதீஷ் குமாருக்கும் கொடுங்க என்று சிரித்துக் கொண்டே கூறினார்... இதைக் கேட்ட கூட்டமும் சிரித்தது.
தொடர்ந்து ராகுல் பேசும்போது, முன்பெல்லாம் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று பேசி வந்தார் பிரதமர். ஆனால் இப்போதெல்லாம் அதை பற்றி பேசுறதே இல்லை... நிறுத்தி விட்டார்.. அவருக்கே தெரிந்திருக்கிறது தான் கூறுவது பொய் என்றும், அதை மக்கள் நம்பவில்லை என்றும்... மக்களும் அவர் சொல்றதும் பொய் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
கடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை!
நான் சொல்கிறேன்.. நிச்சயம் இங்கு பிரதமர் வருவார்.. அப்படி வரும்போது 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்று சொன்னால் நிச்சயம் மக்கள் அவரை விரட்டியடிப்பார்கள். நாட்டை எப்படி நடத்துவது என்று காங்கிரஸுக்கு தெரியும். விவசாயிகளை எப்படி நடத்த வேண்டும் என்று காங்கிரஸுக்கு தெரியும். வேலை வாய்ப்பை எப்படி உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு பொய் மட்டும் சொல்ல தெரியாது.
பொய்களை சொல்லி எங்களால் அவருடன் போட்டி போட முடியாது... இதை நான் சீரியஸாகவே சொல்கிறேன்.. அவர் அளவுக்கெல்லாம் எங்களால் பொய் சொல்ல முடியாது" என்று கூறினார் ராகுல் காந்தி.