இதர் தேக்கோ.. புது ரூட்டைப் பிடித்த ராகுல்.. பிரித்து மேயும் பீகார் தேர்தல் களம்!
- கோயா
பாட்னா: யாரையும் நம்பி நான் இல்லை. என் வழி செம வழி.. இதுதான் ராகுல் காந்தியின் லேட்டஸ்ட் ரகளை. மிரண்டு போய் பார்க்கிறார்களாம் பீகார் அரசியல் பெருந்தலைகள்.
பப்பு என்ற பெயரிலிருந்து ராகுல் காந்தி வெளியில் வர ரபேல் தேவைப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு அதிரடியாக உச்சத்திற்குப் போய் விட்ட ராகுல் காந்தி அத்தோடு நிற்கவில்லை. அடுத்தடுத்து தனது எதிரிகளுக்கு இனிமா கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
யாரெல்லாம் தன்னைப் பார்த்து கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்கிறார்களோ அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி கலகலக்க வைத்து வருகிறார். அதில் முக்கியமானது பீகார்.
மாயாவதியும், அகிலேஷ் யாதவும்
என்னதான், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் வெற்றி பெற்றும் ராகுல் மீதோ, காங்கிரஸ் மீதோ மாயாவதிக்கும், அகிலேஷுக்கும் துளியும் நம்பிக்கை ஏற்படவில்லை. இன்னும் ராகுலை சிறுபிள்ளையாகவே கருதுகிறார்கள் வடமாநில தலைவர்கள் பலரும்.
ராகுல் போட்ட ஸ்கெட்ச்
இதனால் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார் ராகுல். அதன் ஒரு கட்டமாக பீகார் மாநிலத்தில் சோர்ந்து கிடக்கும் காங்கிரசுக்கு ஆக்ஸிஜன் அளிக்க தொடங்கியுள்ளார். கடந்த தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து பீகாரில் தேர்தல் களத்தில் குதித்த காங்கிரசை நிதிஷ் நட்டாற்றில் விட்டு விட்டார்.
அவிங்க நமக்கு வேணாம்ணே
லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரசை அனுசரித்து செல்வது போல் தெரிந்தாலும், தேஜஸ்வி யாதவ் மாயாவதியோடும், அகிலேஷோடும் நெருக்கம் காட்டுவதை ராகுல் ரசிக்கவில்லை. இதனால் தன் வழியில் கலக்க ஆரம்பித்துள்ளார் ராகுல் காந்தி.
செம பேரணி
கடந்த செப்டம்பரில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவராக மதன் மோகன் ஜாவை நியமித்த ராகுல், சென்ற வாரம் பாட்னாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு பீகாரில் காங்கிரஸ் தனியாக பேரணி நடத்திய விவகாரம் தேசிய அரசியலின் கவனத்தை ஈர்த்தது. பீகாரில் இதுவரை கூட்டணி கட்சிகளின் முதுகில் மட்டுமே சவாரி செய்து வந்த காங்கிரஸ் இப்போது தனித்து பீடு நடை போட தொடங்கியுள்ளது.
முழு வேகத்தில் காங்கிரஸ்
38 மாவட்டங்களுக்கு 95 தேர்தல் பணி பார்வையாளர்களை நியமித்து ராகுல் தனி கவனம் செலுத்த தொடங்கியிருப்பது பீகார் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. 1990 வரை தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்த காங்கிரஸ், அதன் பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்ப்பு ஆன கதையானது.
மஞ்சி வருகிறார்
வரும் தேர்தலில் தலித் வாக்குகளை கணிசமாக கொண்டுள்ள ஜிதன் ராம் மஞ்சி (முன்னாள் முதல்வர்), முகேஷ் ஷானி உள்ளிட்டோர் காங்.கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. உ.பி.பாணியில் பீகாரில் தேஜஸ்வி கழட்டிவிட்டாலும் கூட காங்கிரஸ் கரையேறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
விஸ்வாசம் அஜீத் பாணியில் அடிச்சுத் தூக்க ஆரம்பித்திருக்கும் ராகுல் காந்தியைப் பார்த்து பீகார் பெருந்தலைகளுக்கு லைட்டா மனசுக்குள் "டண்டணக்கா டர்" என்று பேசிக் கொள்கிறார்கள்!