மக்களை அலட்சியப்படுத்தியவர்கள் மக்களாலேயே வீழ்த்தப்படுவர்.. மோடியை தாக்கிய தேஜஸ்வி
பாட்னா: மக்களவை தேர்தல் முடிவுகள் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்தித்துள்ள மெகா கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கும் என லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
தேர்தலில் மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என கூறியுள்ள தேஜஸ்வி மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றார். பீகாரில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து பல்வேறு சிறு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், மத்திய அரசை உருவாக்குவதில் உத்திரப்பிரதேசமும், பீகாரும் முக்கிய பங்கு வகிக்க போவதாக குறிப்பிட்டார்.
கமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்!
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியை அகற்ற, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இன்னும் பலமாக ஒன்றிணையும். தலைமை தாங்குவதில் ராகுல் காந்தி பக்குவம் மிகுந்தவராக உள்ளார். மோடி அரசின் கொள்கைகளை நன்றாக விமர்சிக்கிறார். எனவே மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றுவார் என தாம் நம்புவதாக தேஜஸ்வி கூறினார்.
நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கீழ், 5 மாநில முதல்வர்கள் உள்ளனர். மோடியையும் ராகுலையும் ஒப்பிட்டால் ராகுல் பொருத்தம் இல்லாதவராகவா உள்ளார் என கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என கேட்டால் மத்திய அரசு வெறுப்பு அரசியலை கையில் எடுக்கிறது. கீழ்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை மோடி அரசு பழிவாங்குகிறது என சாடினார்.
லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்களுக்கு ஜாமீன் போன்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியவர்கள் நடப்பு தேர்தலில் நிச்சயம் அதே மக்களால் வீழ்த்தப்படுவார்கள்.
மோடி அரசுக்கு எதிரான மனநிலை நாடு முழுவதும் காணப்படுவதை நன்றாக உணர முடிவதாக குறிப்பிட்டார். எனவே ராகுல் காந்தி பிரதமராக ராஷ்டிரிய ஜனதா தளம் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என தேஜஸ்வி கூறினார்.