பீகாரில் பெரும் தலைவலி... ராம்விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு கல்தா கொடுக்கப் போகும் பாஜக கூட்டணி?
பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆகப் பெரும் தலைவலியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் அல்லது வெளியேறலாம் என்கிற நிலைமை உருவாகி உள்ளது.
பீகாரைப் பொறுத்தவரை 1990களின் மண்டல் கமிஷன் அரசியலுக்குப் பின்னர் அரசியலில் தலைகீழ் மாற்றங்கள் உருவாகின. உயர்ஜாதியினர் vs ஒடுக்கப்பட்ட மக்கள் என்கிற அடிப்படையில் மக்கள் அணி திரண்டனர். லாலு பிரசாத் யாதவ், சரத்யாதவ், நிதிஷ்குமார் போன்ற தலைவர்களுக்கு மக்கள் செல்வாக்கு கிடைத்து.
இதே காலகட்டத்தில் தலித்துகள் தனித்த அடையாளத்துடன் எழுச்சி பெற்றனர். இந்த எழுச்சி அரசியலை அறுவடை செய்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். 2000-ம் ஆண்டில் லோக் ஜனசக்தி என தனிக்கட்சியும் கண்டார் ராம்விலாஸ் பாஸ்வான். இருந்தபோதும் 17% வாக்காளர்களாக உள்ள தலித்துகள் ஒட்டுமொத்தமாக பாஸ்வானை தலைவராக கொண்டாடவும் இல்லை.
மகாராஷ்டிராவின் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம இடைக்கால தடை
மத்திய அமைச்சர் பதவியில் நீடிப்பாரா?
பாஸ்வானைப் பொறுத்தவரையில் எந்த கட்சியுடனும் இணைந்து செயல்படக் கூடியவராக இருப்பவர். இதனால்தான் பாஜக தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராகவும் இருக்கிறார். ராம்விலாஸ் பாஸ்வானுக்கு தற்போது 74வயதாகிறது. அடுத்த ஆண்டு 75 வயதை எட்டுகிற பாஸ்வானுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை
75 வயதானவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை என்கிற நடைமுறை பாஜகவால் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்வானின் கட்சியின் ஆதரவில்தான் ஆட்சி நடக்க வேண்டும் என்ற நிலைமை எதுவும் பாஜகவுக்கும் இல்லை. அதனால் இனி பாஸ்வானும் அவரது கட்சியுடனான கூட்டணியும் பாஜகவுக்கு தேவை இல்லாத ஒன்றானதாகிவிட்டது. இதனைத்தான் பீகார் சட்டசபை தேர்தல் களம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பீகாரி நிதிஷ் எதிர்ப்பு அரசியல்
என்னதான் மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்த்துதான் பாஸ்வான் கட்சி அரசியல் செய்து வருகிறது. லோக்ஜனசக்தியின் தேசியத் தலைவராக பாஸ்வான் மகன் சிராக் இருந்து வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் தமக்கு செல்வாக்கு இருக்கிறது என நம்புகிறார் சிராக் பாஸ்வான்.
வேண்டாத விருந்தாளியான லோக்ஜனசக்தி
ஆனால் பாஜகவோ நிதிஷ்குமாரின் ஜேடியூவோ சிராக் பாஸ்வானையோ அவரது கட்சியையோ கவனத்தில் வைத்துக் கொள்ளாத நிலைதான் இருக்கிறது. அதாவது இருந்தால் கூட்டணியில் அமைதியாக இருங்கள்; கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிடுங்கள் என்கிற போக்கைத்தான் பாஜகவும் ஜேடியூவும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
பாஸ்வான் கட்சிக்கு விரைவில் கல்தா?
இதைபுரிந்து கொண்டதால் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும் தங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டவும் நிதிஷ்குமாருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சிராக். இந்த நிலையில் சிராக் பாஸ்வானுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மற்றொரு தலித் தலைவரான மாஜி முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரித்து தங்களது கூட்டணிக்கு கொண்டு வந்திருக்கிறது பாஜக-ஜேடியூ. இப்போது தேர்தல் களத்தில் பாஜகவும் ஜேடியூவும் வேடிக்கை பார்க்க சிராக் பாஸ்வானும் ஜிதன் ராம் மாஞ்சியும் முட்டி மோதுகின்றனர். தற்போதைக்கு பீகார் அரசியலில் இதுதான் ஹாட்டாபிக். அனேகமாக விரைவில் க்ளைமாக்ஸ் அரங்கேறிவிடும்!