3 இடங்களில் மட்டும் ராகுல் பிரசாரம் .. பிரியங்கா வரவே இல்லை.. ஆர்ஜேடி செம எரிச்சல்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் என ஆர்ஜேடி மூத்த தலைவர் சிவானந்த் திவாரி விமர்சித்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகள் (மகாகத்பந்தன்) இணைந்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம், விஐபி, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்சா (மதசார்பற்ற) ஆகிய கூட்டணியுடன் மோதின.
இந்த தேர்தலில் மத்திய அரசு, நிதிஷ் அரசுக்கு எதிராக மகாகத்பந்தன் தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தன. இந்த தேர்தலில் வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்கிற நிலையில் பாஜக- ஜேடியூ கூட்டணி 125 இடங்களை பெற்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் ஆர்ஜேடி கட்சியோ 75 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆர்ஜேடி தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில் பீகார் அரசியலுடன் தொடர்பில்லாத நபர்களை வேட்பாளர்களாக காங்கிரஸ் அறிவித்தது. மாநிலத்தில் 70 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
ஆனால் 70 பொதுக் கூட்டங்களைக் கூட காங்கிரஸ் நடத்தவில்லை. வெறும் 3 நாட்கள் மட்டுமே ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வந்திருந்தார். பிரியங்கா காந்தி வரவே இல்லை. இது சரியல்ல.
தேர்தல் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்த போது ராகுல் காந்தியோ ஷிம்லாவில் உள்ள பிரியங்காவின் இல்லத்திற்கு பிக்னிக் சென்றதாக கூறப்படுகிறது. இப்படியா ஒரு கட்சியை நடத்துவது? காங்கிரஸால் பாஜக பலனடைந்தது என கடுமையாக விமர்சித்துள்ளார்.