பீகார்: ரிசல்ட் பரபரப்புக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடிய தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்.
பீகார் சட்டசபை தேர்தல் களத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நாளைதான் நடக்கப் போகிறது. முதுபெரும் தலைவர்களான பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 1990களின் இளைஞர்களான தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வான் ஆகியோர் இடையேதான் போட்டி என பீகார் தேர்தல் களம் இருந்தது.
பிரதமர் மோடி, நிதிஷ்குமாரின் தீவிர பிரசாரங்கள் ஒருபக்கம்.. இன்னொரு பக்கம் ஏதோ ஒருநம்பிக்கையை எதிர்பார்த்து தேஜஸ்வி, சிராக் பாஸ்வான் பின்னால் அணி திரண்ட இளைஞர்கள்... இப்படியான காட்சிகள் அரங்கேறிய பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
பீகார் தேர்தல் முடிவுகள் எப்படியானதாக இருந்தாலும் தொண்டர்கள் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ரவுடிகளைப் போல நடந்து கொள்ள கூடாது என பொறுப்புணர்வுடன் தேஜஸ்வி யாதவ் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் வென்றால் நாட்டிலேயே மிகவும் இளம் வயது முதல்வர் என்ற பெருமையுடன் அரியாசனம் ஏறுவார் தேஜஸ்வி.
இந்த சூழ்நிலையில் இன்று தமது பிறந்த நாளை பாட்னாவில் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார் தேஜஸ்வி யாதவ்.