பீகாரில் பரபரப்பு: பாஜகவை கழற்றிவிட்டு ஆர்ஜேடியுடன் கை கோர்க்க தயாராகும் நிதிஷ்குமாரின் ஜேடியூ
பாட்னா: பீகாரில் பாரதிய ஜனதாவை கழற்றிவிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கை கோர்க்க நிதிஷ்குமாரின் ஜேடியூ தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜேடியூ 122 தொகுதிகளிலும் பாஜக 121 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
ஆனால் கூட்டணி தர்மத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜேடியூவுக்கு எதிராக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை பாஜக களம் இறக்கியது. ஜேடியூ போட்டியிட்ட இடங்களில் மட்டும் சிராக் பாஸ்வான் கட்சி போட்டியிட்டது. இதனால் ஜேடியூவால் 43 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. பாஜகவோ 74 இடங்களில் வெற்றி பெற்று 2-வது பெரிய கட்சியானது.
அருணாச்சலில் ஜேடியூவுக்கு ஆப்பு
இதனை கூட பொறுத்துக் கொண்டு நிதிஷ்குமார், பாஜகவின் தயவில் மீண்டும் முதல்வரானார். இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் 2-வது பெரிய கட்சியாக இருந்த ஜேடியூவின் 6 எம்.எல்.ஏக்களை கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல் இழுத்தது. பாஜகவின் இந்த போக்கால் ஜேடியூ தலைவர்கள் கொதித்து போயுள்ளனர்.
நிதிஷ்குமார் ஆவேசம்
இதனால் வெறுத்துப் போன நிதிஷ்குமார், முதல்வர் பதவியை தூக்கி எறிய விரும்புவதாக பகிரங்கமாக அறிவித்தார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2015 சட்டசபை தேர்தலில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றன. தற்போது பாஜகவின் பிடியில் இருந்து விடுபட விரும்பும் ஜேடியூ, ஆர்ஜேடியுடன் கை கோர்க்க தயாராகிவிட்டது.
பீகாரில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆபத்து
இதனையடுத்து பீகாரில் பாஜக கூட்டணி அரசு எந்த நேரத்தில் கவிழலாம் என கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்து தேஜஸ்வியை முதல்வராக்கினால் 2024 லோக்சபா தேர்தலில் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக ஆர்ஜேடி ஏற்றுக் கொள்ளதயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாஜகவுடனான ஜேடியூ கூட்டணி எந்த நிமிடத்திலும் முறியலாம் என்கிற நிலை உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால்..
பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் சேர்த்தால் என்ன நடக்கும் என்பதை ஜேடியூ பீகாரிலும் அருணாச்சல பிரதேசத்தில் பட்டு உணர்ந்துள்ளது. பீகாரில் பாஜகவை கழற்றிவிடுவதாக ஜேடியூ பகிரங்கமாக அறிவித்தால் பாஜகவை கூட்டணியில் சேர்க்கவே கூடாது என்ற முடிவுக்கு பல மாநில கட்சிகள் தள்ளப்படும் சூழ்நிலையும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.