"135 வயசு" தாத்தா கட்சிக்கு இது தேவைதானா.. 31 வயசு "பேரனிடம்" குட்டு வாங்கிய காங்கிரஸ்!
பீகார் காங்கிரஸ் கட்சிக்கு தேஜஸ்வி அறிவுரை தந்துள்ளார்
பாட்னா: "காங்கிரஸ் கட்சி தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.. தன்னிடம் உள்ள குறைகளை அது ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என்று 135 வயசான கட்சிக்கு, 31 வயசாகும் தேஜஸ்வி யாதவ் அறிவுரை கூறியுள்ளார்.
பீகாரில் தேஜஸ்விதான் இந்த நேரத்திற்கு முதல்வராகியிருக்க வேண்டும். ஆனால் அதைக் கெடுத்த பெருமை காங்கிரஸையே சேரும்... காரணம் அளவுக்கு அதிகமான தொகுதிகளில் தேவையில்லாமல் போட்டி போட்டு வெறும் 19 பேரை மட்டுமே வெற்றி பெற வைத்து, தேஜஸ்வி கனவில் ஆசிட் அடித்து விட்டது காங்கிரஸ்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட மொத்தமாக 16 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில் நூற்றாண்டைக் கடந்த இந்த பெருசு வெறும் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது உண்மையில் கேவலமானதுதான்.. இந்த நிலையில் தங்களது தோல்விக்கு "ஓவைசி கட்சி" தனியாக போட்டியிட்டதுதான் காரணம் என்று அநாகரீகமான முறையில் மடை மாற்றவும் முயற்சிக்கிறார்கள் சிலர்.
வாக்களிக்க வேண்டும்
முஸ்லீம்கள் காலம் காலமாக தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும், அடிமையாக இருக்க வேண்டும், அவர்கள் அதிகாரத்தை கையில் எடுக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ.. இந்த நிலையில்தான் பொதுமக்கள் மனதில் தோன்றிய எண்ணத்தை தேஜஸ்வியே தனது வாயால் இன்று இதோ கூறி விட்டார்.
காங்கிரஸ்
மகா கூட்டணியின் சட்டசபைக் கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் குறித்தும் குறிப்பிட்டார். தேஜஸ்வி யாதவ் சொல்லும்போது, "மோசடி செய்துதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தபால் ஓட்டுக்களை திரும்ப எண்ணி பாருங்கள். நாங்கள்தான் ஆட்சியில் அமர்வோம்.
பலம்
மாற்றம் வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியோ பண பலம், ஆள் பலம், அதிகார பலத்தால் இந்த வெற்றியை தட்டிப் பறித்துள்ளது. மக்கள் நாங்களே ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் அதை மறுக்க மாட்டோம்... அந்த ஆதரவை தேடி திரட்ட தயங்க மாட்டோம். மக்களிடமே செல்வோம்.
வென்றிருப்போம்
எங்களை விட வெறும் 12,270 வாக்குகளையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகம் பெற்றுள்ளது... இதை வைத்து எப்படி அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியும்? எப்படி எங்களை விட கூடுதலாக 15 சீட்களைப் பெற்றிருக்க முடியும்? வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடந்ததாக தெரியவில்லை. சரியாக நடந்திருந்தால் நாங்கள் 130 தொகுதிகளில் வென்றிருப்போம்... தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக எழுதப் போகிறோம்.
பொதுச்செயலாளர் தாரிக்
காங்கிரஸ் கட்சி தனது பக்க தவறுகளை, குழப்பங்களை சரி செய்து கொள்ள வேண்டும். இந்தத் தோல்விக்கான காரணங்களை அவர்களும் ஆராய வேண்டும்" என்று கூறினார் தேஜஸ்வி. தேஜஸ்வியின் கூற்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாரிக் அன்வரும் ஒத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டுகளில், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி குறித்து அவசரமாக ஆராய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. 70 இடங்கலில் போட்டியிட்டும் 19 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது வேதனையானது.
செயல்பாடு
உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடு காரணமாகவே மகாகத்பந்தன் கூட்டணியால் அரசமைக்க முடியாமல் போய் விட்டது. எங்கு தவறு நடந்தது என்பதை நாம் ஆராய வேண்டும். அதேசமயம், அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியின் (ஓவைசி கட்சி) பீகார் வரவு நல்லதற்கில்லை என்று கூறியுள்ளார் தாரிக் அன்வர்.
சிக்கல்
என்ன பேசி என்னாகப் போகுது.. இனி அங்கு நித்திய கண்டம் பூரணாயுசு நிலைதான் . இங்கு மட்டுமல்ல பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால்தான் கூட்டணிக் கட்சிகளுக்கும் சிக்கல் வருகிறது. திமுக என்ன செய்யப் போகிறது என்று பார்க்க வேண்டும். குஷ்பு சொன்னது போல தேவையில்லாத லக்கேஜாக மாறி வருகிறது இந்த "தாத்தா" கட்சி!