நான் சாகவேண்டும் என பில்லி சூனியம் செய்த லாலு பிரசாத்.. பாஜக சுஷில் மோடி புகாருக்கு தேஜஸ்வி மறுப்பு
பாட்னா: தாம் மரணிக்க வேண்டும் என்பதற்காக பில்லி சூனியம் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கூறிய புகாரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. பீகாரில் முதல் கட்டமாக வரும் 28-ந் தேதியும் 2-வது கட்டமாக நவம்பர் 3, 3-வது கட்டமாக நவம்பர் 7-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகார் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் ஜேடியூ-பாஜக அணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்படுகிறது.
லாலு வைத்த சூனியம்
அதேநேரத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறக் கூடும்; புதிய திருப்பங்கள் வரும் என பூடகமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பீகார் துணை முதல்வரான பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி பிரசார கூட்டம் ஒன்றில் பேசுகையில், நான் இறந்துவிட வேண்டும் என்பதற்காக லாலு பிரசாத் எனக்கு எதிராக மந்திர தந்திரங்கள் செய்தார் என கூறியிருந்தார். இதனை லாலு பிரசாத்தின் மகனும் ஆர்ஜேடி-காங். கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார்.
தேஜஸ்வி மறுப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேஜஸ்வி யாதவ், சுஷில் மோடியிடம் இருந்து இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை நான் எதிர்பார்க்கவில்லை. வேலைவாய்ப்பு, தொழில்வளம், கல்வி, சுகாதாரம் குறித்துதான் சுஷில் மோடி பேச வேண்டும்.
15 வருஷமாக என்ன செய்தீங்க?
கடந்த 15 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி மூடநம்பிக்கையை பரப்புகிற விஷயங்களை பேசுவதில் அர்த்தம் எதுவும் இல்லை.
வேட்பாளர் சுட்டுக் கொலை- கண்டனம்
சியோஹரில் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குரியது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இச்சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றார்.