ஒரு வழியாக.. நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன தேஜஸ்வி யாதவ்.. கூடவே ஒரு 'குட்டு'
பாட்னா: பீகார் முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவரும், அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி 125 தொகுதிகளை வென்றது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது ராஷ்டிரிய ஜனதாதளம். இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க, முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.
இதையடுத்து டுவிட்டரில் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,
முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள நிதீஷ் குமார் ஜிக்கு வாழ்த்துக்கள். நாற்காலியை உறுதி செய்வதையே உங்கள் லட்சியமாக வைத்து இருப்பதற்கு பதிலாக, பீகாரில் 19 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, கல்வி, மருத்துவம், பணம் ஈட்டுதல், நீர்ப்பாசனம் உள்ளிட்ட நேர்மறையான விஷயங்களில் அவர் அரசின் முன்னுரிமைக்கு பாடுபடுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தல் வெற்றியை திருடிக் கொண்டுள்ளதால் தார்மீக அடிப்படையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார் தேஜஸ்வி. மேலும், நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டனர்.
இந்த நிலையில்தான் தேஜஸ்வி தற்போது வாழ்த்தியுள்ளார். ஆனால் நாற்காலி மீதே குறியாக இருக்காதீர்கள் என கூறி குட்டும் வைத்துள்ளார்.