பீகார்... வெங்காயத்தை கையிலெடுத்து பாஜகவை உரித்து தொங்கவிட்ட தேஜஸ்வி! 16 அடி பாயும் குட்டி லாலு!
பாட்னா: பீகார் தேர்தல் களத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் அணியின் முதல்வர் வேட்பாளரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமாகிய தேஜஸ்வி யாதவின் ஆக்ரோஷமும் ஆவேசமும் தேர்தல் முடிவுகளில் பெரும் திருப்பம் காத்திருக்கிறதோ என்கிற அளவுக்கு இருக்கிறது.
பீகார் தேர்தல் களமானது ஒரு வரலாற்று விசித்திரத்தை எதிர்கொண்டிருக்கிறது. 1970களில் ஜனதா இயக்கம் அல்லது ஜேபி இயக்கத்தால் அரசியலுக்கு வந்தவர்கள் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான்.. 1990களில் மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு ஆதரவான கிளர்ச்சிகளின் போது பீகாரின் ஆகப் பெரும் மக்கள் தலைவர்களாக பிறப்பெடுத்தார்கள் இவர்கள்.
கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக லாலு பிரசாத், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வானை மையமாக வைத்துதான் பீகார் தேர்தல் களம் இருந்தது. உத்தரப்பிரதேசத்திலும் கன்சிராம், முலாயம்சிங் யாதவ், மாயாவதி என மண்டல் கமிஷன் காலம் தந்த தலைவர்கள்தான் கோலோச்சினார்கள்.
50% இடஒதுக்கீடு விவகாரம்.. நாடகமாடும் தி.மு.கவுக்கும் கடும் கண்டனம்: டிடிவி தினகரன்
நிதிஷ்குமார்- சகாக்களின் வாரிசுகள்
இந்த 2020 சட்டசபை தேர்தல் களத்தில் ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்து போய்விட்டார். லாலு பிரசாத் யாதவ் சிறைவாசம் அனுபவித்தால் தேர்தல் களத்தின் சுவரொட்டிகளில் கூட அவர் படம் இல்லை. நிதிஷ்குமார் எனும் மூத்த தலைவர் ஒருவர்தான் நிற்கிறார். அவரை எதிர்த்து நிற்பவர்கள்தான் காலத்தின் கோலம் என்பது. தம்மோடு சமகாலத்தில் பயணித்த அதே லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும் அதே ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வானும்தான்.
தீர்மானிக்கும் இளையவர்கள்
பீகாரில் குடும்ப அரசியல்- கோமாளித்தனமான அரசியல் என்றெல்லாம் ஏகடியம் செய்யப்பட்ட லாலுவின் குடும்பத்தில் இருந்து அரசியல் ஆவேசப் புயலாய் சீறிப் புறப்பட்டிருக்கிறது தேஜஸ்வி யாதவ் எனும் குட்டிப் புலி. தேர்தல் கருத்து கணிப்புகள் எதனிலும் தேஜஸ்வி யாதவுக்கு சோடை எதுவும் இல்லை. சிராஜ் பாஸ்வானுக்கும் காலந்தோறும் இருக்கும் வாக்கு வங்கியும் இருக்கிறது. சமூக நீதியின் தளர்கர்த்தர்களாகிய லாலுவும் பாஸ்வானும் தந்திருக்கும் இந்த தம்பிமார்கள்தான் இப்போது தீர்மானிக்கும் சக்திகளாக வலம் வருகின்றனர்.
தேஜஸ்வியின் அரசியல்
அன்றாட அரசியல், மதவாத அரசியல், நிதிஷ்குமார் எதிர்ப்பு அரசியல் எல்லாவற்றையும் கையில் எடுத்து துவம்சம் செய்து வருகிறார் தேஜஸ்வி. அவரை இளம்பிராயத்து லாலுவாகவே நெகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர் சில மூத்த தலைவர்கள். இப்போது பிரச்சனையாக இருக்கும் வெங்காயத்தை வைத்துக் கொண்டு பீகார் தேர்தல் களத்தில் பாஜகவை வெலவெலக்க வைத்து கொண்டிருக்கிறார் தேஜஸ்வி. வெங்காயம் விலை கிலோ ரூ100 என எட்டியிருப்பதையும் மத்திய பாஜக அரசின் தோல்வியையும் முடிச்சுப் போட்டு முட்ட முட்ட வெளுக்கிறார்.
ஆர்ஜேடிக்கு அதிக வாக்கு சதவீதம்?
அத்தனை கூட்டத்திலும் பீகார் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, இடம்பெயர் தொழிலாளர் பிரச்சனை, சுகாதார வசதி இந்த விவகாரங்களை பேசாமல் தேஜஸ்வி ஓய்வதில்லை. வெங்காய மாலைகளை கைகளில் ஏந்தி பீகார் தேர்தல் களத்தில் சிங்கமாக கர்ஜிக்கும் தேஜஸ்வியை தங்களது எதிர்காலமாக பார்க்கின்றனர் பீகார் இளைஞர்கள். இதனை சுட்டிக்காட்டும் விதமாக டைம்ஸ்நவ் சி வோட்டர் கருத்து கணிப்பு இப்படி சொல்கிறது.. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் வாக்கு சதவீதங்களில் பாஜகவுக்கு சரிவும் ஆர்ஜேடிக்கு ஏறுமுகமும் காத்திருக்கிறதாம்!