ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு!
பாட்னா: அவவரவர் இங்கு அரசு வேலை கிடைக்குமா என போட்டி தேர்வுகளை எழுதிவிட்டு வேலை கிடைக்காத விரக்தில் அலைந்து கொண்டிருக்கையில் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்துள்ளார். இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
அரசு வேலை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே குதிரைக்கொம்பான விஷயம் தான். ஏனெனில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியது உள்ளது. 100 வேலைக்கு லட்சம் பேருக்கு மேல் போட்டியிடுகிறார்கள். மாதம் மாதம் ஊதியம் நிரந்தரமான வேலை என்பதால் நிம்மதியாக வேலை செய்ய பலரும் அரசு வேலைக்கு ஆசைப்படுகிறார்கள். அத்துடன் வேலை வாய்ப்பும் பெரிதாக கிடைக்காததால் பலரும் அரசு வேலையை விரும்புகிறார்கள். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம். அவர், பீகார் மாநில அரசு பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இத்துடன் பங்கா என்ற மாவட்டத்தின் நீர் மேலாண்மைத் துறையில் ஓர் அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த மூன்று அரசு வேலைக்காகவும் 30 ஆண்டுகள் சம்பளமும் வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை பீகாரில் கொண்டு வரப்பட்டது. அப்போது தான் ஒரே பெயர் ஒரே விலாசத்தில் மூன்று அரசு வேலைகளை எப்படி சுரேஷ் ராம் செய்து வந்தார் என்பதை விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க சுரேஷ் ராம் பான்கார்டு ஆதார் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் பணிகள் தொடர்பான ஆவணத்தை கேட்ட போது, சுரேஷ், பணி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. அப்படியே .தலைமறைவானார்.
அதன்பின்னர் தான் சுரேஷ் 3 அரசு வேலைகளை செய்து 30 ஆண்டு சம்பளம் வாங்கியதை அதிகாரிகள் உறுதி செய்ததோடு அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தில் சுரேஷ் ராம் மீது போலீசில் புகார் அளித்ததுடன் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பீகார் அரசின் துணைச் செயலாளர் சந்திரசேகர் பிரசாத் சிங், உத்தரவிட்டுள்ளார். இதனால் அவரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது. சுரேஷ் போலீசிடம் சிக்கும் போது தான் 30 வருடம் எப்படி மூன்று வேலைகளை செய்தார் என்பதும். மூன்று வேலைக்கு சம்பளம் வாங்கினார் என்பதும் தெரியவரும்.