நிதீஷ் குமார் மீது செம கோபத்தில் பீகார் மக்கள்.. பிரதமர் மோடிக்கு ஜே.. பரபரப்பு கருத்துக் கணிப்பு
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் முதல்வர் நிதீஷ் மீது பீகார் மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நிதீஷ் குமார் அரசு மீது கோபமாக உள்ளீர்களா.. அந்த அரசு மாற வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு, ஆம் கோபமாக இருக்கிறோம், அரசு மாற வேண்டும் என 61.1 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் நிதீஷ் அரசு மீது கடும் கோபத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
25.2 சதவதம் பேர் கோபமாக இருக்கிறோம், ஆனால் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 13.7 சதவீதம் பேர் கோபம் இல்லை, ஆட்சியையும் மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சரி, பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, மிகவும் திருப்தி என 47.06 சதவீதம் பேரும், ஓரளவு திருப்தி என 28.45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 24.29 சதவீதம் பேர்தான் மிகவும் அதிருப்தி எனத் தெரிவித்துள்ளனர்.
பிரதமராக நரேந்திர மோடி எப்படி செயல்படுகிறார் என்ற கேள்விக்கும் மோடிக்கே ஆதரவு அதிகம் உள்ளது. அதாவது 42.91 சதவீதம் பேர் அதிக திருப்தி என்று தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி என்று கூறியுள்ளனர். 26.47 சதவீதம் பேரே திருப்தியே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக - நிதீஷ் குமார் இணைந்து போட்டியிடுகிறார்கள். இதில் நிதீஷ் குமாருக்கு சுத்தமாக ஆதரவு இல்லை. அதேசமயம், பாஜகவுக்கு ஆதரவு இருக்கிறது. இந்த வினோதமான கலவையான ஆதரவால் இக்கூட்டணி எப்படி தேறி வரப் போகிறது என்று ஆச்சரியம் எழுந்துள்ளது.
சிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு
அதற்கும் வாக்காளர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 34.4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணிக்கு 31 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இது ஆச்சரியமானது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடும் போட்டியைக் கொடுப்பது தெரிய வந்துள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 5.2 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் வாழ்க்கை தரம் உயர்ந்ததா என்ற இன்னொரு கேள்வி பீகார் மக்களிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, வாழ்க்கை தரம் மோசமாகிவிட்டதாக 46.79 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வாழ்க்கை தரம் முன்னேறியதாக 26.5 சதவீதம் கருத்து தெரிவித்தனர். வாழ்க்கை தரத்தில் எந்த மாற்றமும் இல்லை என 26.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.