10 லட்சம் பேருக்கு வேலை வழங்க, முதல்வர், எம்எல்ஏக்களின் சம்பளத்தில் கூட கைவைப்பேன்.. தேஜஸ்வி யாதவ்
பாட்னா: 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டியிருந்தாலும், அது செய்தாவது வேலைகள் வழங்கப்படும் என ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28-ல் 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம் ஒரு அணியாகவும், ராஷ்டரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும் களத்தில் இருக்கின்றன. இதில் ஆளும் பாஜக, ஜக்கிய ஜனதா தளம் கூட்டணி முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நிதீஷ்குமார் உள்ளார். எதிர்க்கட்சி கூட்டணி முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல்: 94 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு- 1463 வேட்பாளர்கள்!
இந்நிலயில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி கூட்டணி (ஆர்ஜேடி- காங்கிரஸ்) முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டியிருந்தாலும், அது செய்தாவது வேலைகள் வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.
முன்னதாக மற்றொரு பிரச்சாரத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ். முதல்வர் நிதிஷ்குமார், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 50ஆகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார். அவரே 70 வயதைக் கடந்துவிட்டார். ஆனால் இந்த முறை பொதுமக்கள் அவரை ஓய்வு பெற வைக்க உள்ளார்கள்.
எங்கள் அரசு அமைந்தால் , நாங்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம். பிகாரில் மக்கள் ஏன் 3 ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடிக்க நிலை ஏற்படுகிறது, ஏன் அவர்களுக்கு 4-5 ஆண்டுகள் ஆகும் நிலை ஏற்படுகிறது என்பதை முதல்வர் நிதிஷ் குமார் சொல்லவேண்டும். இன்று பீகாரில் உயர்கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளதென்றால் அதற்குக் காரணம் முதல்வர் நிதிஷ்குமார்தான் என்றார்.