சென்னைக்கு பாராட்டு.. அதிகாரிக்கு ஆபாச திட்டு.. சிக்கலில் பீகார் ஐஏஎஸ் அதிகாரி கேகே பதாக்.. வீடியோ
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலால் துறை முதன்மை செயலாளர் கேகே பதாக், சென்னையை பாராட்டி பேசியதோடு, துணை கலெக்டரை ஆபாசமாக திட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கேகே பதாக்கிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கேகே பதாக். இவர் 1990 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பீகாரில் பணி செய்து வந்தார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த 2015ல் மீண்டும் பீகார் பணிக்கு திரும்பினார். அங்கு பூரண மதுவிலக்கு கொண்டு வருவதில் கேகே பதாக்கிற்கும் பங்கு உண்டு. மிகவும் ஸ்ட்ரிக்டான ஆபிசராக இவர் அறியப்படும் நிலையில் தற்போது பீகார் மாநில கலால் துறை, பதிவுத்துறை முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த பொறுப்புகளுடன் பீகார் பொது நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி பிரிவு டிஜியாகவும் செயல்பட்டு வருகிறார்.
கேகே பதாக் தலைமையில் ஆலோசனை
இந்நிலையில் தான் போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காதது தொடர்பாகவும், அதனை சரிசெய்வது சம்பந்தமாகவும் கேகே பதாக் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அவர் முன்பு சில அதிகாரிகள் அமர்ந்திருந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏராளமானவர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த வேளையில் ஜூனியராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காததை சுட்டிகாட்டி அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆபாச வார்த்தைகளால் திட்டு
இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் துணை கலெக்டர் ஒருவரை பார்த்து கேகே பதக் ஆபாசமாக திட்டியுள்ளார். அந்த வீடியோவில், ‛‛சென்னையில் மக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கிறார்கள். இங்கு யாராவது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை பார்த்து இருக்கிறீர்களா?. சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் கூட காத்திருக்காமல் ஹார்ன் அடிக்கிறார்கள். இதை நீங்கள் பார்க்கவில்லை?. இதுபற்றி 13ம் தேதி விவாதிப்போம்'' எனக்கூறி ஆவேசமாகவும், ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.
|
வெளியான வீடியோ
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டு தன்னுடன் பணியாற்றும் ஜூனியர்களை இப்படி திட்டி இருக்க கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விஷயத்தில் கேகே பதக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.
வழக்குப்பதிய கோரிக்கை
இதுபற்றி பீகார் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் சங்கமும் கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் திவாரி கூறுகையில், ‛‛கேகே பதாக்கை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஆபாசமான வார்த்தைகள் பேசுவது என்பது ஏற்கவே முடியாதது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்'' என சாடியுள்ளார்.
அமைச்சர் சொல்வது என்ன?
மேலும் இதுதொடர்பாக அந்த மாநில தலைமை செயலக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு சம்பவம் குறித்து பீகார் கலால்துறை அமைச்சர் சுனில் குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛சம்பவம் குறித்து கேள்விபட்டேன். வீடியோவை பார்த்துவிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.