தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!
பாட்னா: தேசத்தின் தொழில்வளர்ச்சியில் பீகாரின் பங்களிப்பு 0.5% என்ற அளவில்தான் இருக்கிறது. இதனால் பீகாரில் வேலைவாய்ப்பின்மை என்பது பிரதான பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில் வேலைவாய்ப்பின்மை பிரதான பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக நிதிஷ்குமாரின் 15 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்ற கேள்விக்கு உருப்படியான பதில் கிடையாது.
இதனால்தான் ஒவ்வொரு மேடையிலும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்ற எதிர்க்கட்சியினர் வேலைவாய்ப்பின்மை விவகாரத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். இந்த கேள்விகளுக்கு நிதிஷ்குமாரால் எந்த தெளிவான பதிலும் சொல்ல முடியாத தடுமாற்றமும் இருக்கிறது.
பீகார்: கொரோனாவுக்கு இடையே நடக்கும் முதல் சட்டசபை தேர்தல்.. அருமையான ஏற்பாடு.. அச்சம் தேவையில்லை
லாக்டவுனில் உச்சம்
கொரோனா லாக்டவுன் உச்சகட்ட காலமான ஏப்ரல் - மே மாதங்களில் பீகாரில் வேலைவாய்ப்பின்மையானது 47% ஆக இருந்தது. தேசிய அளவில் இதே காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது 24%ஆக இருந்தது. பீகாரில் தனிநபர் வருமானம் என்பது 2018-19ல் ரூ30,617 ஆக இருந்தது.
பெண்கள் வேலைவாய்ப்பு
பீகாரில் பெண்கள் வேலைவாய்ப்பின்மையும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. தேசிய அளவில் பெண்கள் வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொரு 4வது கிராமப் புற பெண்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பீகாரில் 100 பெண்களுக்கு 4 பெண்கள்தான் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
சற்றே ஆறுதல்
கடந்த செப்டம்பரில் பீகாரில் வேலைவாய்ப்பின்மை 12% ஆக இருந்தது. செப்டம்பரில் தேசிய அளவிலான வேலைவாய்ப்பின்மை என்பது 6.67% ஆக இருந்தது. 2018-ல்தான் பீகாரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருக்கிறது.
பீகார் தனிநபர் வருமானம்
2018-19ல் தேசிய அளவில் தனிநபர் வருமானம் என்பது ரூ92,565 ஆக இருந்தது. ஆனால் பீகாரில் ரூ30,617 ஆக இருந்தது. 2011-ல் இது ரூ21,750 ஆக இருந்தது. தனிநபர் வருமானம் சற்றே மேம்பாடைந்தும் இருக்கிறது.
தொழில்வளர்ச்சியில் 0.5% பங்கு
2016-17ல் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பீகாரின் பங்களிப்பு 0.5%தான். இதற்கு முன்னர் இது 0.3% மட்டுமே இருந்தது. பீகாரில் சராசரியாக ஒரு தொழிற்சாலைக்கு 40 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தேசிய அளவில் ஒரு தொழிற்சாலைக்கு 76.7 பேர் பணிபுரிகின்றனர். பீகாரில் வேளாண் தொழில், மீன்பிடி மற்றும் வனம்சார் தொழிலில் 45% வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.