நெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு
பாட்னா: பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து காது கொடுத்துக் கேட்காத அதிகாரிகளை தடிகளைக் கொண்டு அடியுங்கள் என பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளவர் கிரிராஜ் சிங். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்துவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரிராஜ் சிங், "அரசு அதிகாரிகள் பெரும்பாலும் தங்கள் புகார்களுக்குக் கொஞ்சம் கூட கவனம் செலுத்துவதில்லை என அடிக்கடி மக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர்.
நான் அப்போது அவர்களிடம் சொன்னேன், இது போன்ற சிறிய பிரச்சனைகளை தீர்க்க தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், கிராம பிரதிநிதிகள், ஆட்சியர், ஆகியோர் உள்ளனர். மக்களுக்கு பணி செய்வது தான் அவர்கள் கடமை.
அவர்கள் உங்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை என்றால், மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையைப் பிளந்துவிடுங்கள். அப்போதும் அவர்கள் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.
காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் வீழ்ச்சி: பிகார் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? காங்கிரஸ் துணையா, சுமையா?
அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சு தற்போது வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிகாரிகளை தாக்குங்கள் என்று அமைச்சர் கூறிய இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.