இதெல்லாம் நல்லா இல்லங்க.. அருணாச்சலில் கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்த பாஜக மீது ஜேடியூ செம பாய்ச்சல்
பாட்னா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
60 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வி அடைந்தது.
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 41 இடங்களைப் கைபற்றியிருந்தது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், யாரும் எதிர்பாராத வகையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்எல்ஏக்களில் ஆறு பேர் பாஜகவில் இணைந்தனர். அதேபோல அருணாச்சல் மக்கள் கட்சியின் ஒரே சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜகவில் இணைந்தார்.
இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி, "அருணாச்சல பிரதேசத்தில் ஆறு ஜே.டி.யு எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணி அரசியலுக்கு நிச்சயம் ஒரு நல்ல அறிகுறி இல்லை" என்றார்.