யார் நண்பர்கள் என்பதை யூகிப்பதில் ஜேடியூ தோல்வி அடைந்துவிட்டது: பாஜக மீது நிதிஷ்குமார் அட்டாக்
பாட்னா: அரசியலில் யார் நண்பர்கள்? யார் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை யூகிப்பதிலும் அடையாளம் காண்பதிலும் ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்) தோல்வி அடைந்துவிட்டது என பாஜகவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மறைமுகமாக தாக்கி உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ தோல்வி அடைந்தது; பாஜகவோ 2-வது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது. ஜேடியூவின் தோல்விக்கு சிராக் பாஸ்வானை பாஜக மறைமுகமாக களமிறக்கியதும் ஒரு காரணம்.
இந்த அதிருப்தி புகைந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் தங்களது 6 எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்தது பெரும் அதிர்ச்சியை அந்த கட்சிக்கு கொடுத்தது. பாஜகவின் இந்த சித்துவிளையாட்டை பகிரங்கமாகவே ஜேடியூ எதிர்த்தும் வருகிறது.
பாஜக மீது மறைமுக தாக்கு
அதேபோல் பீகார் முதல்வர் பதவி தமக்கு தேவை இல்லை எனவும் நிதிஷ்குமார் கூறி வருகிறார். இதனால் பீகார் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு கவிழலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜகவை மறைமுகமாக நிதிஷ்குமார் தாக்கி பேசியுள்ளார்.
தொகுதி பங்கீட்டில் தவறு
இது தொடர்பாக நிதிஷ்குமார் கூறியதாவது: சட்டசபை தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 மாதங்களுக்கு முன்னதாக தொகுதி பங்கீட்டை முடித்திருக்க வேண்டும். அதை செய்யாமல்விட்டது பெரிய தவறு என உணருகிறோம். இதற்கான மிகப் பெரிய விலையை ஜேடியூ தேர்தலில் கொடுத்திருக்கிறது.
தொடரும் அவதூறுகள்
முதல்வராக வேண்டும் என நான் விரும்பவில்லை. பாஜக, ஜேடியூ தலைவர்கள் அழுத்தங்களால்தான் முதல்வராக பதவி ஏற்க ஒப்புக் கொண்டேன். மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர். அதில் எந்த குழப்பமும் எங்களுக்கு இல்லை. ஆனாலும் எங்கள் மீதும் எங்கள் கட்சி மீதும் தொடர்ந்து அவதூறு பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
யூகிக்க தவறிவிட்டோம்
யார் எங்களுடைய நண்பர்கள்? யார் எங்களுக்கு நம்பிக்கையானவர்கள் என்பதை யூகிப்பதில் நாங்கள் தோற்றுவிட்டோம். பீகாரில் ஒருபோது என்.ஆர்.சி. அமல்படுத்தப்படமட்டாது. அப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதை ஜேடியூ கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.