ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
பாட்னா: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாடு முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இதனடிப்படையில் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்க முடியும்.
ஏற்கனவே 16 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் 12 மாநிலங்களில் ஜூன் 1 முதல் இத்திட்டம் முழுமையாக அமுலுக்கு வருகிறது.
ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா, திரிபுரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் முழுமையாக அமுலுக்கு வருகிறது. பீகார், உ.பி. ஒடிஷா மற்றும் சத்தீஸ்கரில் சில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுகிறது. இங்கும் முழுமையாக இத்திட்டம் செயல்படும்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 35 கோடி பயனாளிகள் இத்திட்டத்தால் பயனடைவர். மேலும் 8 மாநிலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.