பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்னாச்சு? கேள்விக்கு பதில் எங்கே...மோடி மீது தேஜஸ்வி யாதவ்ல் பாய்ச்சல்
பாட்னா: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது பீகார் மாநிலத்துக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும் என்கிற வாக்குறுதி என்னதான் ஆச்சு என்று பிரதமர் மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் களை கட்டியுள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடியுடன் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றார். ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
சிறப்பு நிதி எங்கே?
ஹூசுவா பொதுக்கூட்டத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பிரதமர் மோடி பீகாருக்கு வருகை தந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் பீகார் சிறப்பு அந்தஸ்து- பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு என்ன ஆனது என்பது பற்றி பதில் சொல்ல வேண்டும்.
வறுமையை ஒழித்தாரா?
பீகார் வெள்ளத்தாலும் கொரோனாவாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மோடி விளக்கம் தர வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் நிதிஷ்குமார் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்தாரா? இந்த மாநிலத்தில் வறுமையை நிதிஷ்குமார் ஒழித்துவிட்டாரா?
கொரோனாவால் வெளியே வராத நிதிஷ்
அரசு பணிகள் வழங்கப்படும் என்று அறிவித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? நிதிஷ்குமார் ஆட்சிக் காலத்தில் எத்தனை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன? கொரோனா அச்சத்தால் 4 மாதங்களாக வீட்டை விட்டே நிதிஷ்குமார் வெளியேவரவில்லை.
திரும்பிய 32 லட்சம் பீகாரிகள்
கொரோனா லாக்டவுன் காலத்தில் 32 லட்சம் பீகாரிகள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிட்டனர். அவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். ஆனால் இன்னமும் மாநிலம் திரும்பிய அந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
இப்ப ஓட்டு கேட்க வருகிறார்
கொரோனாவை கண்டு 144 நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர் நிதிஷ்குமார். இப்போது வாக்கு கேட்டு வீதிக்கு வந்திருக்கிறார். லட்சக்கணக்கான பீகார் மக்கள் பிற மாநிலங்களில் லாக்டவுன் காலத்தில் துயரப்பட்ட போது கூட வீட்டை விட்டு வெளியே வராதவர்தான் நிதிஷ்குமார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.