அட கொடுமையே! ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே? மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'
பாட்னா: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமறைவாகிவிட்டார். அவர் தற்போது எங்கே இருக்கிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லையாம்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில்தான் தேர்தலை அக்கட்சி எதிர்கொண்டது.
தேஜஸ்வியின் நடவடிக்கைகளை மூத்த கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேஜஸ்வி டெல்லியில்தான் தலைமறைவாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஸ் பிரசாத் சிங், தேஜஸ்வி யாதவ் எங்கே இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவர் ஒருவேளை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்கவும் சென்றிருக்கலாம். ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை என விரக்தியாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சித் தலைவரே மாயமாகிப் போனது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பீகாரில் உச்சகட்ட வெயில் கொளுத்துகிறது. 100க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் மரணித்துள்ளனர். இப்படியான ஒரு சூழலில் கட்சித் தலைவரே காணாமல் போயிருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.