பதான் சர்ச்சை: ஷாருக்கானா அது யாரு? செய்தியாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பிய அசாம் முதல்வர்!
பாட்னா: பதான் திரைப்பட சர்ச்சை தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஹிமந்த பிஸ்வ சர்மா..ஷருக்கான் என்பவர் யார் ? என்றும் அவரைப்பற்றியும் பதான் திரப்படம் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என கேலியாக பதிலளித்தார்.
பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடித்துள்ள படம் பதான். தீபிகா படுகோனே கதாநாயாகியாக நடித்து இருக்கும் இந்த படம் வரும் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பாடல் காட்சியில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது.
காவி உடையில் ஆபாசம்.. மகளுடன் படத்தை பார்க்க முடியுமா ஷாருக்கான்.. ம.பி. சபாநாயகர் கேள்வி
ஷாருக்கானுடன் படு கவர்ச்சியாக
இந்துக்களின் புனித நிறமாக கருதப்படும் காவி நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு ஷாருக்கானுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் தீபிகா படுகோனே ஆடியிருப்பதாக கூறி இந்து அமைப்புகள் விமர்சித்தன. இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்றும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கும் வகையில் சில தலைவர்கள் பேசினர்.
தியேட்டர்களில் திரையிட எதிர்ப்பு
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூட பதான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல் சில பகுதிகளில் பதான் திரைப்படத்தை திரையிடக்கூடாது என தியேட்டர்களுக்கே சென்று இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்த சம்பவமும் நடைபெற்றது. அந்த வகையில் அசாமின் நரேங்கி பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பதான் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
ஷாருக்கான் யார் என்று தெரியாது
இந்த திரையரங்கத்திற்கு சென்ற பஜ்ரங் தள் அமைப்பினர் அங்கிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்து தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போது, "ஷாருக்கான் என்பவர் யார்? அவரைப்பற்றியோ அவரது பதான் படம் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.
இந்தி படங்கள் மீது அல்ல
அப்போது செய்தியாளர்கள் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கூறினர். இதற்கு பதில்கொடுத்த அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா, "அசாம் மக்கள் அஸ்ஸாமீஸ் மொழி படங்கள் மீதுதான் அக்கறை கொள்வர். இந்தி படங்கள் மீது அல்ல. அசாமிய மொழி படமான Dr Bezbarua - Part 2' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மக்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும்" என்றார்.
ஷாருக்கான் என்னிடம் பேசினால்..
தொடர்ந்து பேசிய ஹிமந்த பிஸ்வ சர்மா, இந்த பிரச்சினை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். எனினும், ஷாருக்கான் என்னிடம் பேசவில்லை. ஷாருக்கான் பேசினால் இந்த விவகாரத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்சினை என்று பார்ப்பேன். சட்டம் ஒழுங்கு மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில் விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.