திரும்பி பார்க்க வைக்கும் பீகார்.. குணமடைந்தோர் % அதிகரிப்பு.. இறந்தோர் % குறைவு.. இதுதான் சிகிச்சை!
பாட்னா: பீகாரில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் 41 சதவீதம் உள்ளது அந்த மாநிலத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் கொரோனாவால் இறப்போர் விகிதமும் 1.4. சதவீதம் என குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் 41 சதவீதம் உள்ளது. அது போல் இறப்பு விகிதமும் குறைந்த அளவிலான 1.4 சதவீதமாகவே உள்ளது. இது அந்த மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மாநில சுகாதாரத் துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
72 நோயாளிகள்
இதுகுறித்து பீகார் மாநிலத்தின் சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 72ஆக உள்ளது. 29 பேர் குணமடைந்துவிட்டனர். இருவர் பலியாகிவிட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒருவருக்கு கூட செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படவில்லை. எனவே இவர்களின் உடல்நலம் சீராக உள்ளது.
கொரோனா
கொரோனா நோயாளிகள் 72 பேரில் 61 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால்தான் எளிதில் ஏராளமானோர் குணமடைய முடிந்தது. 10 முதல் 20 வயது வரை 18 பேரும், 21 முதல் 30 வயது வரை 22 பேரும், 31 வயது முதல் 40 வரை 21 பேரும், 41 வயது முதல் 50 வயது வரை 5 பேரும், 51 வயது முதல் 60 வயது வரை 4 பேரும், 61 வயதிற்கு மேல் இருவரும் உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் சராசரி வயது 31 ஆகும் என்றார்.
சிகிச்சை
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் மாநிலத்தில் பெரும்பாலானோர் கொரோனாவிலிருந்து மீண்டதற்கு காரணம் குறைந்த வயதுடையோர் என்பதுடன், மற்றொரு காரணமும் உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் பெரும்பாலானோரை முன்கூட்டியே கண்டுபிடித்ததுதான். வைரஸ் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையை எடுத்துக் கொள்ள தொடங்கினர். அதனால்தான் அவர்களுக்கு சிகிச்சை பலனளித்தது.
24 மாவட்டங்களில் கொரோனா இல்லை
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அசித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், இருமல் மருந்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட மருந்துகளையே சிகிச்சைக்கு கொடுத்தோம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பீகாரில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.