பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நீடிப்பாரா? தேஜஸ்வி யாதவ்-க்கு மகுடமா? தீர்மானிக்கும் 2ம் கட்ட தேர்தல்
பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தொடருவாரா? அல்லது ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மகுடம் சூட்டுவாரா என்பதை தீர்மானிக்க இருக்கிறது இன்றைய 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள்.
பீகாரின் 243 சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 28-ல் 71 இடங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
பீகார் முதல் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி இருந்தன. 1990களில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களில்தான் பீகாரில் 60%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. கடந்த 2015 தேர்தலில் 56.66% வாக்குகளே பதிவாகின.
பீகார் சட்டசபைத் தேர்தலில் கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல குற்றவாளிகளும் இருக்காங்க பாஸ்
கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டி?
இன்று தேர்தல் நடைபெறும் 94 தொகுதிகளில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை: ஆர்ஜேடி- 56; பாஜக 46; ஜேடியூ - 43; காங்.24. இதில் பாஜகவுடன் 27 தொகுதிகளில் ஆர்ஜேடி நேரடியாக மோதுகிறது. ஜேடியூவுடன் 24 தொகுதிகளை ஆர்ஜேடி எதிர்கொள்கிறது. பாஜக கூட்டணியான விஐபி கட்சியை 5 தொகுதிகளில் நேருக்கு நேராக ஆர்ஜேடி சந்திக்கிறது.
தேஜஸ்வி, தேஜ்பிரதாப்
ஆர்ஜேடி தலைவர்களான தேஜஸ்வி, தேஜ்பிரதாப் இருவர் போட்டியிடும் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ரகோபூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ். 2010-ல் தேஜஸ்வியின் தாயார் ராப்ரிதேவியை இதே தொகுதியில் பாஜக வீழ்த்தியது. ஆனால் கடந்த தேர்தலில் தேஜஸ்வியிடம் இந்த தொகுதியை பாஜக பறிகொடுத்தது. ஹசன்பூர் தொகுதியில் தேஜ்பிரதாப் போட்டியிடுகிறார். ஜேடியூவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராஜ்குமார் ராயை எதிர்த்து களம் காண்கிறார் தேஜ்பிரதாப். நிதிஷ்குமார் அமைச்சரவையில் சீனியர்களான ராம்சேவக் சிங், ஷர்வண் குமார், நந்த்கிஷோர் உள்ளிட்டோரும் இன்று களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்.
2015 தேர்தல் முடிவுகள்
இந்த 94 தொகுதிகளில் 33 இடங்கள் கடந்த 2015 தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றவை. அப்போது ஆர்ஜேடி 42 இடங்களில் போட்டியிட்டு இந்த மகத்தான வெற்றியை பெற்றது. ஜேடியூ 41 இடங்களில் போட்டியிட்டு 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு 20 இடங்களும் 11 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. பாஜக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்ற எல்ஜேபி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 2-ல் வென்றது.
முடிவை தீர்மானிக்கும்
2015 தேர்தலில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மொத்தம் 70 இடங்களுக்கு மேல் வாரி வழங்கியவை இந்த 94 தொகுதிகள். இதில் 5,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் மட்டுமே 18. இதனால்தான் இன்றைய தேர்தல் ஆர்ஜேடிக்கும் ஜேடியூவுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்றைய தேர்தல் முடிவுகள்தான் நிதிஷ்குமார் முதல்வராக தொடர்ந்து சரித்திரம் படைப்பாரா? அல்லது இளம் தலைவராக உருவெடுத்திருக்கிற தேஜஸ்விக்கு பீகார் மகுடம் சூட்டுமா? என்பதை தீர்மானிக்கும்.