இதுக்கு பேசாமல் தோத்துருக்கலாம் போலயே.. குழப்பத்தில் நிதீஷ் குமார்.. காத்திருக்கும் "குண்டுகள்"!
நிதிஷ்குமார் முதல்வர் பொறுப்பை இன்று ஏற்க உள்ளார்
பாட்னா: இதுக்கு பேசாமல் முதல்வர் பொறுப்பை நிதிஷ்குமார் வேண்டாம் என்றே சொல்லி இருக்கலாம்.. இப்போது இல்லாவிட்டாலும், எப்போதாவது பாஜக மூலம் நிதிஷூக்கு தலைவலி கூடும் என்பதற்கான அறிகுறி இப்போதே தென்படவும் ஆரம்பித்துவிட்டது.
இன்று நிதிஷ், தொடர்ச்சியாக 4ஆவது முறையாக முதல்வராக பதவியேற்காவுள்ளார். ஒட்டு மொத்தமாக பார்த்தால் 7வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் போட்டியிட்டு வெறும் 43 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், 2015 சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சி 71 இடங்களை கைப்பற்றி இருந்தது... எனவே பாஜகவை விட 31 சட்டமன்ற உறுப்பினர்களை குறைவாக பெற்ற நிதிஷ் குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஜனதா தளம்
கடந்த ஆட்சியில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுசில் குமார் மோடியை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இருந்தனர்... இதில், 18 பேர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். 12 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்... இப்போது 74 சீட்டுக்களை பாஜக கையில் வைத்துள்ளது..
அமைச்சர்கள்
அதற்கு அதிக அமைச்சர்கள் பதவி கிடைக்க உள்ளது... இந்த தேர்தலில் கடந்த முறை அமைச்சர்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளம், பாஜகவை சேர்ந்த 24 பேர் போட்டியிட்டனர். இதில், 10 பேர் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டனர்.. அதனால் அவர்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 சந்தேகங்கள்
இன்றைய சூழலில் பீகார் மாநிலத்தை பொறுத்தவரை, 2 மிக முக்கிய சந்தேகங்கள், குழப்பங்கள் நிலவி வருகின்றன.. தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார்... அப்போது, அவருடன் பாஜகவின் மேலிட பார்வையாளராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுசில் குமார் மோடி போன்றோர் கூடவே சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நிதீஷுடன் ஆளுநரை பார்க்கவில்லை. நிதீஷ் அங்கு போன பிறகு, இவர்கள் மட்டும் தனியாக சென்று ஆளுநரை பார்த்துள்ளனர். இதுதான் குழப்பமாக இருக்கிறது... இதற்கு என்ன காரணம் என்பதையும் ஆராய வேண்டி உள்ளது.
சபாநாயகர்
முதல்வராக நிதிஷ் இருந்தாலும், 2 துணை முதல்வர்கள் பதவிகளை பாஜக கேட்டுள்ளது.. இதுபோக சபாநாயகர் பதவியும் கேட்கிறது.. இவைகளும் போதாது என்று முக்கிய இலாகாக்களை கேட்டு பெறும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது... அதாவது ஆட்சி என்னமோ நிதீஷிடம் தான் இருக்கும்.. ஆனால் முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் தங்களுக்குத் தேவை என்று பாஜக நிர்ப்பந்திப்பதாக கூறப்புகிறது. அதாவது டம்மி முதல்வராகவே நிதீஷ் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
சுசில்குமார் மோடி
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:
"இப்படி மிக மிக முக்கிய பொறுப்புகளை பாஜகவே எடுத்து கொள்வதற்கு, முதல்வர் பொறுப்பையும் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.. முதல்வர் பொறுப்பில் நிதிஷ் இருந்தாலும்,கிட்டத்தட்ட பொம்மை அரசு போலத்தான்.. இன்னைக்கு இல்லாவிட்டாலும், நாளைக்கு பிரச்சனைகள் இவர்களுக்குள் வரத்தான் செய்யும்.. துணை முதல்வராக இருந்த சுசில் குமார் மோடிக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது.
மத்திய அமைச்சர்
வேண்டுமானால் அவர் தேசிய அரசியலில் ஈடுபடுத்தப்படுவார்.. அதுமாதிரியே நிதிஷூம் இறங்கிவிடலாம்.. இந்த முதல்வர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வதைவிட, அதை நிராகரித்துவிட்டு, மத்திய அமைச்சர் பொறுப்பை கேட்டு வாங்கி கொண்டு போய்விடலாம்.. நிம்மதியாக இனி வரும் காலங்களில் நிதிஷ், அரசியல் நகர்வை தொடங்கலாம்.. இல்லாவிட்டால் 15 வருடங்களில் இல்லாத தேவையில்லாத சிக்கல் எழும். அப்படி நிதிஷ், மத்திய அமைச்சராக சென்றால், நிச்சயம் பாஜகவின் தலைதான் மேலேழும்.
தேஜஸ்வி
ஆனால், திடீரென மேலேழுந்து வந்துள்ள தேஜஸ்வியின் எழுச்சி, அக்கட்சிக்கு ஒரு ஷாக்கை எந்நேரமும் தந்து கொண்டுதான் இருக்கும். பாஜக எப்போதுமே தன் எதிரியை வீழ்த்துவதைவிட, உடன்இருக்கும் நண்பர்களைதான் முதலில் வீழ்த்தும்.. அப்படித்தான் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோர்ஓரங்கட்டப்பட்டனர்.. அந்த வகையில்தான் இன்று நிதிஷ் சிக்க உள்ளார்.. ஆனால், தேஜஸ்வியின் விஸ்வரூபமெத்தை இனி பாஜகவால் சமாளிப்பது கஷ்டம்தான்" என்கின்றனர்.