மாப்பிள்ளை நிதீஷ்தான்.. ஆனால் ஆட்சி நடத்த போவது இவங்கதான்... கலகலக்க போகும் பீகார்!
நிதிஷ்குமார் முதல்வர் பொறுப்பை ஏற்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது
பாட்னா: "மாப்பிள்ளை இவர்தான், ஆனால், இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது இல்ல" என்ற கதைபோலதான் பீகார் நிலைமையும் மாறும் போல தெரிகிறது.. முதல்வர் என்னவோ நிதிஷ்குமார்தான்.. ஆனால், ஆட்சியை நடத்துவது பாஜகவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
நடந்து முடிந்த தேர்தலில் நிதிஷ்குமார் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.. அதேசமயம், பெரும்பான்மையான இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 15 வருடங்களில் நிதிஷ்குமார் கட்சி பீகாரில் 115 இடங்களில் போட்டியிட்டு வெறும் 43 இடங்களில்தான் வெற்றியை தக்கவைத்துள்ளது.. அதே நேரத்தில் பாஜக 110 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. அதாவது, பாஜகவின் அபாரமான வியூகத்தால் எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி சொந்த கூட்டணி கட்சியையும் போட்டு தள்ளி உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.
சிராக் பஸ்வான்
இப்போது 2 விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.. சிராக் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை பறித்துவிட்டதாக நிதிஷ்குமார் அதிர்ச்சியில் உள்ளாராம். அதிலும் 30 முக்கிய தொகுதிகளின் வெற்றியை பறிகொடுத்துள்ளதை நிதிஷால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை.
மெஜாரிட்டி
அதுமட்டுமல்ல, தன்னுடைய அமைச்சரவையில் உள்ள 6 முக்கியமான அமைச்சர்களின் தோல்வியால் அப்செட்டில் உள்ளாரா நிதிஷ்குமார்.. அதனால் ரிசல்ட் வெளியான பிறகு தன்னை சந்திக்க வந்த பாஜக குழுவினரிடம் முதலமைச்சர் பதவியை ஏற்பதில் சற்று தயக்கமாக இருப்பதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம்.
முக்கிய துறைகள்
ஆனால், மற்றொரு வேலை ஜரூராக நடந்து வருகிறது.. நிதிஷைவிட டபுள் மடங்கு வெற்றியை பெற்றுள்ள பாஜக, முக்கியமான இலாக்காக்களை குறி வைத்து வருகிறது.. அதாவது நிதிஷ்குமாரிடம் இருந்த உள் துறை, பணியாளர் துறை போன்ற துறைகளை கேட்டு வருவதாகவும் தெரிகிறது.. உள்துறையை தந்துவிட்டால், பிறகு எதற்கு முதல்வர் பதவி என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் ஆதங்கம்.
நிதிஷ்குமார்
இப்போதைக்கு பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.. அதாவது வழக்கம் போல் துணை முதல்வர் பதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது... எனவே, முதல்வர் பொறுப்பை நிதிஷ்குமார் ஏற்க முன்வருவாரா என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், முதல்வராக நிதிஷ்குமாரே இருந்தாலும் பாஜகவின் கையே பீகாரில் ஓங்கி வரும் என்று இப்போதே தெரிந்துவிட்டது!