அத்தனை வாய்ப்பு தந்தும் வீணடிச்சுட்டீங்க.. பீகாருக்கு துரோகம் பண்ணிட்டீங்க.. நிதீஷ் மீது பாயும் லாலு
நிதிஷ் குமார் மீது லாலு பிரசாத் குற்றஞ்சாட்டி உள்ளார்
பாட்னா: முதல்வர் நிதீஷ் குமார் பீகார் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், ஏராளமான வாய்ப்புகளை மக்கள் தந்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
முதல்வர் நிதிஷ்குமார், மனரீதியாக, உடல்ரீதியாகவும் பலவீனமடைந்துவிட்டதாகவும், தொடர்ந்து அவரால் மாநில பொறுப்புகளை கவனித்து கொள்ள முடியுமா என்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் காட்டமாக விமர்சித்து கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
பீகாரில் நவம்பர் 29-ம் தேதியுடன் தற்போதைய ஆட்சி முடிவடைய இருக்கிறது... இதையடுத்து, புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க எதிர்க்கட்சிகள் வலுவான கோரிக்கைகளை முன்வைத்தும், தேர்தலை அம்மாநிலம் சந்திக்கிறது.
கடந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கூட்டணியில் பாஜகவை எதிர்த்து வெற்றிபெற்று நிதிஷ்குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகி, பாஜகவுடன் கூட்டணியமைத்து முதல்வரானார்.. இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான அரசியல் களத்தில்தான், பாஜகவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரசுடன் சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளமும் தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.. அந்த வகையில் இது ஒரு முக்கியமான தேர்தல் ஆகும்!
பீகார் சட்டசபை தேர்தல் 2020: பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு சிறப்பம்சங்கள் என்னென்ன
சில மாதங்களுக்குமுன்புவரை நிதீஷ் குமாரின் ஆட்சியே தொடரும் என்று சொல்லப்பட்டது.. ஆனால், நடந்த நிகழ்வுகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை.. தேஜஸ்வி யாதவ்தான் நிதிஷூக்கே டஃப் தருவார் போல தோன்றுகிறது. குத்துமதிப்பாக வெளியாகி வரும் கருத்து கணிப்புகளும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியையே உறுதி செய்யும்படிதான் உள்ளன.
இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை பெற்று தருவோம் என்று அதிரடி அறிவிப்பை தேஜஸ்வி வெளியிட்டார்.. இதுதான் அந்த மாநிலத்தில் பரபரப்பான பேச்சாக சென்று கொண்டிருக்கிறது.. ஏற்கனவே 6 மாசமாக வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், இந்த வாக்குறுதியானது இளைஞர்கள் பெரிதும் கவர்ந்துள்ளது.. ஆனால், தடாலடியாக ஒரு பதிலை அதற்கு தந்தார் நிதிஷ்.
"10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்கிறார்கள்.. இவ்வளவு பேருக்கு எங்கிருந்து சம்பளம் தர முடியும்? எந்த ஊழலுக்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்களே, அவர்களின் ஊழல் பணத்தில் இருந்து இந்த சம்பளத்தை தருவீர்களா? அல்லது கள்ள நோட்டு அச்சடித்து சம்பளம் தருவீர்களா? என்று நிதிஷ்குமார் தன் பிரச்சாரத்தில் காட்டமாக கேட்டார்.. அதாவது லாலுவை குறிவைத்துதான் அவர் இப்படி பேசியிருந்தார்.
அதுமட்டுமில்லை, "10 லட்சம் பேருக்கு வேலைகளை வழங்க முடிந்தால், மீதமுள்ளவர்களை அப்படியே விட்டுவிடுவார்களா? 10 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் என்பதை முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிக்கப்படுமா? இப்படி வாக்குறுதியால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்... மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல நாங்களும் கடுமையாக உழைத்திருக்கிறாம்... எங்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கினால் இன்னும் திறன்பட நாங்கள் மேலும் செயல்படுவோம்" என்று உறுதி தந்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய முதற்கட்ட வாக்குபதிவுக்கான பிரச்சாரத்தில் பேசிய தேஜஸ், "பீகாரில் இயற்கை சீற்றம் வந்தபோது, நிதிஷ் எங்கே இருந்தார் என்று மக்கள் கேட்கிறார்கள்? எந்த அடிப்படையில் அவர் தனக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்? கடந்த 15 வருஷமாக மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கான வழிகள் எதுவுமே உருவாக்கப்படவில்லை.. எந்தவொரு நிறுவனத்தின் முதலீடும் அதிகரிக்கவில்லை.
இதனால், தொழிலுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கையே மாநிலத்தில் அதிகரித்தது.. அதேசமயம், வறுமையில் தவிப்போரின் விகிதமும் குறையவில்லை.. இப்படி இருக்கும்போது, எதன் அடிப்படையில் திரும்பவும் வாக்களிக்குமாறு மக்களிடம் நிதிஷ்குமார் கேட்கிறார்? என்று காட்டமாக விமர்சித்துள்ளார் தேஜஸ்வி.
இப்படிப்பட்ட சூழலில்தான், லல்லு பிரசாத் நிதிஷ் மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது சம்பந்தமாக ஒரு ட்விட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், முதல்வர் நிதீஷ் குமார் பீகார் மக்களுக்கு துரோகம் இழைத்ததாகவும், பொதுமக்கள் வாய்ப்புகளை பலமுறை தந்தும் அதை நிதிஷ்குமார் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.