பேனர்களுக்கு எதிரான தமிழக அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு- வீடியோ
Recommended Video
சென்னை: சென்னை பள்ளிக்கரணை சாலையில், மென்பொருள் பொறியாளர், சுபஸ்ரீ என்ற இளம் பெண் ஸ்கூட்டரில் பயணித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது பேனர் காற்றில் விழுந்தது. அதேநேரம், பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில், அவர் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில், அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு, மாநிலம் முழுக்க பேனர் மற்றும் பிளக்சுகள் வைக்க உடனடி தடை விதித்தது.
எனவே தமிழகம் முழுக்க இப்போது எங்குமே பேனர் மற்றும் பிளக்சுகளை, பார்க்க முடிவதில்லை. இது ஒரு நல்ல முன்முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழ், தமிழக மக்கள் சிலரிடம் கருத்துக்கள் கேட்டது. அரசு எடுத்துள்ளது மிகுந்த நல்ல செயல் என்று பலரும் மனதார பாராட்டியுள்ளனர்.
நடைபாதையில், சிறு பாத்திரங்கள் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவர் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பற்றி கூறுகையில், பேனர் வைப்பது தவறான செயல் தான். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அதை தடை செய்ய, அரசு எடுத்த முடிவு நல்ல விஷயம் என்றார்.
"பேனர் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது வருந்தத்தக்கது. எனவே இதுபோன்ற தடை என்பது முக்கியமானது. வரவேற்கத்தக்க விஷயம் தான். எந்த கட்சியினராக இருந்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட வேண்டியது அவசியம்." என்றார் மற்றொரு நபர்.
நடுத்தர வயது ஆண் ஒருவர், கூறுகையில் "இது வரவேற்கத்தக்க செயல். இதனால் விபத்துகள் பெருமளவு குறையும். தமிழக அரசு நடவடிக்கை பாராட்டத்தக்கது." என்றார்.
ஆட்டோ டிரைவர் ஒருவர், கூறுகையில், பொது இடத்தில் பேனர் வைப்பது தொல்லையாகத்தான் இருக்கிறது. நல்ல வேளையாக அரசு இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது என்றார்.
மற்றொருவர் கூறுகையில், "பேனர் மற்றும் பிளக்சுகளுக்கு, விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த தடை தொடர வேண்டும். அந்த அந்த கட்சி தலைமைகள், இது தொடர்பாக அவரவர் தொண்டர்களுக்கு வலியுறுத்த வேண்டும். நடிகர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோர் தங்களது ரசிகர்களை பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும். சினிமா பேனர்களாலும், இதற்கு முன்பு, சில அப்பாவிகள் பலியாகியுள்ளனர் என்பதை திரைப்பிரபலங்கள் உணர்ந்து தங்கள் தரப்பையும் திருத்த முன்வர வேண்டும்" என்கிறார்.
மூதாட்டி ஒருவர் கூறுகையில், தேர்தல் முதற்கொண்டு எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், பேனர், பிளக்சுகள் வைக்க கூடாது. மற்றபடி பேனர் தடைக்கு, அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்தார்.
சுபஸ்ரீ, மரணம் மறுக்க முடியாத, மறைக்க முடியாத சம்பவம் என்றாலும், இனிமேலும் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியதுதான் என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
அரசு அதன் கடமையை சரியாக செய்து வருகிறது. நடந்ததது ஒரு அசம்பாவித சம்பவம் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதான். ஆனால், அந்த சம்பவத்தை வைத்து யாருமே அரசியல் லாபம் பெறவோ, அல்லது பப்ளிசிட்டி லாபம் பெறவோ, முயற்சி செய்யாமல், அரசின் நடவடிக்கைகளுக்கு, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பும் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோளாக உள்ளது.
RECOMMENDED STORIES