மத்திய அமைச்சருக்கு வெங்காயத்தை அனுப்பிய காங். நிர்வாகிகள்... கருத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்
பெரம்பலூர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பெரம்பலூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு கிலோ வெங்காயத்தை தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
வெங்காயத்தை தாம் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வதில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறக் கோரி அவர்கள் கடிதமும் அனுப்பியுள்ளனர்.
மேலும், ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெங்காயம் பார்சல்
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வெங்காயத்தை தபாலில் அனுப்பி வைத்து நூதனப் போராட்டம் நடத்தியுள்ளனர். வெங்காயத்தை அதிகளவு தாம் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திரும்பப் பெறுக
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை என்றும், வெங்காயம் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை அவர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் அவஸ்தை
வெங்காய விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் மிகுந்த அவஸ்தை படும் நிலையில், பொறுப்பான பதவியில் உள்ள நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசுவது ஏற்கத்தக்கதல்ல என பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு வெங்காயம் பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினர்.
மாவட்ட காங்.நிர்வாகிகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அனைத்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் திடீர் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக மத்திய அரசுக்கு எதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.