இதோ மண்ணுக்கு அடியில்தான் ஒளிச்சு வச்சிருக்கேன்.. சுட்டி காட்டிய முருகன்.. நகையை அள்ளிய போலீஸ்!
கொள்ளை அடிக்கப்பட்ட 4 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன
Recommended Video
பெரம்பலூர்: "இதோ.. இந்த மண்ணுக்கு அடியிலதான் நகையை புதைச்சு வெச்சிருக்கேன்" என்று கொள்ளையன் முருகன் தெரிவிக்க.. அதன்படியே புதைக்கப்பட்ட 4 கிலோ தங்கநகைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கர்நாடக போலீஸ் பிடியில் இருந்த முருகனை மடக்கிப் பிடித்தது தமிழக போலீஸ்.. அதிதீவிர விசாரணையை கையில் எடுத்து வருகிறது!
லலிதா ஜுவல்லரி கொள்ளையில் 8 பேர் ஈடுபட்டிருந்தாலும், முருகன், சுரேஷ் இவர்கள் 2 பேர்தான் முக்கியமானவர்கள்.
சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். ராப்பகலாக வலைவீசி முருகனை தேடி வந்த நிலையில், பெங்களூரில் போய் சரணடைந்தது நம் போலீசாருக்கு கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்தது.
4 கிலோ தங்கம்
இந்நிலையில், கொள்ளை தொடர்பாக பெங்களூர் போலீசார் சரணடைந்த முருகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது கொள்ளையடித்ததில் 4 கிலோ தங்கத்தை திருவெறும்பூர் பகுதியில் வேப்பந்தட்டை என்ற இடத்தில் மண்ணுக்குள் புதைத்து வைப்பதாக சொல்லவும், கர்நாடக போலீசார் முருகனை அழைத்து கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தனர். அங்கு புதைத்து வைத்திருந்த 4 கிலோ தங்கத்துடன், முருகனை திரும்பவும் பெங்களூருக்கே அழைத்து சென்றனர். ஆனால் தகவலறிந்த நம் போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்துவிட்டனர்.
எஸ்பி தலைமை
இதையடுத்து, பெங்களூரு போலீஸ் பிடியில் இருந்து முருகனை தமிழக போலீசார் திரும்பவும் பெரம்பலூருக்கு பெங்களூர் போலீசாருடனேயே அழைத்து வந்தனர். பெரம்பலூரில் எஸ்பி தலைமையிலான குழு முருகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூர் போலீசார்
பெங்களூரில் நடந்த கொள்ளை தொடர்பாக, தங்களையும் வைத்து கொண்டு முருகனிடம் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று பெங்களூர் போலீசார் கேட்டுக் கொள்ளவும், அதன்படியே விறுவிறு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இப்பதான் மண்ணுக்குள் நகையை புதைத்த விஷயமே வெளிவந்துள்ளது. இவை லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தான் என்பது உறுதியாகி உள்ளது.
தீவிர விசாரணை
ஆனால்,மீட்கப்பட்ட இந்த நகைகளை பெங்களூர் எடுத்து செல்வதா, தமிழகத்திலேயே வைப்பதா என்ற பேச்சு நடந்து வருகிறது. இப்போது, நம் போலீசாரின் பிடிக்குள் முருகன் வந்தாகிவிட்டது. நகைக்கடை கொள்ளைக்கு உதவியவர்கள், கடை ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா? இந்த இடத்தில் ஓட்டை போட்டால், சரியாக நகை இருக்கும் இடத்துக்கு செல்லலாம் என ஐடியா தந்தது யார் என்ற கேள்விக்கெல்லாம் இனிமேல்தான் பதில் தெரியவரும்.
இப்போது நம் போலீசாரின் பிடியில் முருகன் உள்ளதால், லலிதா ஜுவல்லரி கொள்ளையின் மொத்த டீடெயிலும் தெறித்து வெளியே வந்து விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.