கணக்கு வழக்கு இல்லாம செலவு செய்த பெரம்பலூர் பைரவி டீச்சரை தெரியுமா?.. ஆனா அத்தனையும் புண்ணிய கணக்கு!
பெரம்பலூர்: ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள செல்போன் இல்லாத மாணவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கணக்கு ஆசிரியை ஒருவர் ரூ 1 லட்சம் மதிப்பிலான 16 செல்போன்களை வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில வழியில் 16 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள்.
இவர்களது பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்து வருகிறார்கள். கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன.
ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கு.. அனல் பறந்த வாதங்கள்.. நாளை சென்னை ஹைகோர்டில் தீர்ப்பு
படிக்க முடியவில்லை
இந்த நிலையில் இங்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 மாணவர்களிடமும் செல்போன் இல்லை. வாங்கித் தரும் அளவுக்கு பெற்றோரிடம் வசதியும் இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். படிக்க முடியாவிட்டாலும் மாணவர்களின் ஆர்வத்தை கணக்கு ஆசிரியை பைரவி புரிந்து கொண்டார்.
ரூ 1 லட்சம்
இதனால் தனது சொந்த செலவில் அவர்களுக்கு செல்போன் வாங்கித் தர முடிவு செய்தார். அதன்படி ரூ 1 லட்சம் மதிப்பில் 4ஜி ஸ்மார்ட் போன்களையும் 4 ஜி சிம்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன் ரீசார்ஜும் செய்து கொடுத்துவிட்டார். வீட்டில் இருந்தே பள்ளி என்ற அரசின் திட்டத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு ஆசிரியை பைரவி அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
செல்போன்
இதுகுறித்து ஆசிரியை பைரவி கூறுகையில் சிலரிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை என்கிறார்கள். சிலரோ தங்கள் பெற்றோர் வேலைக்கு செல்வதால் அவர்கள் எடுத்துச் செல்வதாக கூறினார்கள். மேலும் சிலர் ரீசார்ஜ் செய்ய வசதியில்லை என்றார்கள். 10ஆம் வகுப்பு தேர்வு பொது தேர்வு. இந்த மாணவர்களுக்கு போன் மூலமான கல்வி மிகவும் அவசியமான ஒன்றாகும். அது போல் ஆங்கில வழியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் செல்போன் வழங்க போகிறேன்.
பைரவி
இதன் மூலம் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். செல்போனுக்கான செலவு எனது ஒரு மாத ஊதியத்தை விட அதிகம் என்ற பைரவி, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தால் இது போல் செல்போன் இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்திட முடியும் என்றார்.
அரசு ஆசிரியர்கள்
இவரை போல் ஏராளமான அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த தங்கள் மாணவர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கித் தந்து அவர்கள் வயிறார உண்ண வழிவகை செய்துள்ளனர். அது போல் கல்வி பசி தீரவும் வழி செய்தால் அவர்களின் சந்ததியே வாழ்த்தும்!