பிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்!
Recommended Video
பெரம்பலுார்: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, ஊருக்குள் அனுமதிக்காமல் கிராம மக்கள் மற்றும் பா.ம.க.,வினர் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பாமக போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு கேட்க விடாமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கையும் எடுக்க கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு கிளப்பி வருகிறது. வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆங்காங்கே கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், அவ்வப்போது கட்சிகளுக்கு இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.
திருமாவளவன் பிரச்சாரம்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் , தி.மு.க., கூட்டணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பலுார், குன்னம் சட்டசபை தொகுதிகளில் உள்ள, 30 க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இரவு, 9 மணியளவில், ஒகளூர் கிராமத்துக்கு, திருமாவளவன் திறந்த ஜீப்பில் சென்றார். அப்போது, அவரது வாகனத்தை, பொதுமக்கள் மற்றும் பா.ம.க.,வினர் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் மறித்தனர். அப்போது, புதிதாக மயான கொட்டகை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, உங்கள் கட்சியை சேர்ந்த திராவிடமணி என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இது பற்றி தனக்கு தெரியாது என திருமாவளவன் கூறியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதனால், திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருமாவளவன் திரும்பினார்
இதனையடுத்து, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மங்கலமேடு போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைந்து போக செய்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன், திருமாவளவன், ஓட்டு கேட்காமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.