அள்ளி இறைக்கும் பாரிவேந்தர்.. திக்குமுக்காடும் கூட்டணிக் கட்சிகள்.. வாய் பிளக்கும் மக்கள்!
பெரம்பலூர்: அடடா அடடா பாரிவேந்தர் நம்ம தொகுதியில் போட்டியிடாமல் போய் விட்டாரே என்று அக்கம் பக்கத்து தொகுதி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புலம்பாத குறையாக பெரம்பலூரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனராம்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிட்டுள்ளார். இதனால் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொறுப்பில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாம்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் பாக்கெட்டை நிரப்பி பாசத்தை பொழிகிறாராம் பாரிவேந்தர். பக்கத்து தொகுதியான திருச்சியில் இவர் போட்டியிட்டு இருக்கக்கூடாதா என திருச்சி மாவட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் ஏங்குகிறார்களாம்.
கட்டி ஏறும் கூட்டம்
அந்தளவுக்கு பார்த்து பார்த்து படி அளந்து வருகிறாராம் பாரிவேந்தர். என்னதான் சொந்தமாக செய்திசேனல் நடத்தினாலும் கூட துக்கடா நிருபர்களையும்
மதித்து மூன்றாயிரம் வரை அன்பளிப்பு அளிக்கப்படுகிறதாம்.
பின்னாடியே போகும் கூட்டம்
இதனால் பாரிவேந்தர் பிரச்சாரத்திற்கு செல்லும் பாயிண்ட்களுக்கு நிர்வாகிகள் உடன் செல்கிறார்களே இல்லையோ ஒரு டஜன் நிருபர்கள் உடன் செல்கிறார்களாம். மேலும் கடந்த 4 நாட்களில் ஸ்டாலின் கலந்து கொண்ட 8 பொதுக்கூட்டங்களில் முசிறியில் தான் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதியது.
பேரமே கிடையாது
அதற்கு காரணம் மாவட்டச்செயலாளர்கள் கேட்ட தொகையை பேரம் பேசாமல் தந்தது தானாம். எல்லோர் மனசையும் குளிர்விக்கும் பாரிவேந்தரை வெற்றி பெற வைத்து, அவர் மனசை திமுக கூட்டணி கட்சியினர் குளிர்விக்க வைப்பார்களா என்பதை ஒரு மாதத்தில் தெரிந்துகொள்ளலாம்.
வேடிக்கை பார்க்கும் மக்கள்
தேர்தலை காரணமாக வைத்தும், அதில் வெற்றி பெறுவதற்காகவும் இப்படி பணத்தை வாரியிறைத்து வரும் அரசியல் கட்சிகளைப் பார்த்து மக்கள் வாய் பிளந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.