உலகமே இன்றுதான் சோப்பால் கைகளை கழுவுகிறது.. ஆனா இந்த ஆசிரியர் செஞ்சத பாருங்க!!
பெரம்பலூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெரம்பலூரில் எவ்வாறு கையை சோப்பால் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து பாடம் எடுத்தார். இன்று பெரம்பலூரில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை 900 மாஸ்க் இலவசமாக வழங்கியுள்ளார் ஒரு ஆசிரியர்.
பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பாடு,சுகாதாரம், கல்வி என அனைத்தையும் கற்றுத் தர வேண்டிய இடத்தில் ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். அதை சரியாக செய்து வருகிறார் பெரம்பலூரில், கத்தாழை மேடு கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சலிம் பாபு.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சோப்பு எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர், சோப்பு கொண்டு எவ்வாறு கைகளைக் கழுவி ஆரோக்கியமாக தங்களை வைத்துக் கொள்வது என்று கற்றுக் கொடுத்தார்.
தற்போது தானே சைக்கிளில் சென்று கத்தாழை மேடு கிராமத்தில் இருக்கும் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இலவசமாக 900 மாஸ்க் கொடுத்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்குக... வேல்முருகன் வலியுறுத்தல்
இதுகுறித்து தலைமை ஆசிரியர் பாபு கூறுகையில், ''கத்தாழை மேடு கிராமம் மிகவும் பின்தங்கியது. இங்கு இருக்கும் மக்களுக்கு மாஸ்க் எவ்வாறு பயன்படுத்துவது என்பதுகூடத் தெரியாது. ஆதலால், அவர்களுக்கு மாஸ்க் வழங்கி எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுரை வழங்கினேன். மாஸ்க்குகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது குறித்தும், அதை எவ்வாறு கை படாமல்பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவரித்துள்ளேன்'' என்கிறார்.
இவரது பள்ளியில் மொத்தமே 34 மாணவர்கள்தான் படிக்கின்றனர். ஆனால், சிறந்த பள்ளியாக பலமுறை தேர்வு செய்யப்பட்டு இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாகத்தான் கொரோனா வைரஸ் காரணமாக சோப்பால் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்று உலகமே திரண்டு வந்து அறிவுரை வழங்கி வருகிறது. ஆனால், அதற்கு முன்பே சோப்பால் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று தனது மாணவர்களுக்கு பாபு அறிவுறுத்தி உள்ளார்.
இதுமட்டுமில்லை, மரங்கள் நட வேண்டியதன் அவசியம் குறித்தும் விவரித்துள்ளார். பள்ளி வளாகம் சுற்றிலும் மாணவர்கள் மரங்களை நாட்டியுள்ளனர். ''கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மாணவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தேன். இன்று அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது'' என்கிறார் பாபு.
Recommended Video
பள்ளி மாணவர்களும் இவரது சேவையை பாராட்டுகின்றனர். ஆசிரியர் கற்றுக் கொடுத்ததுபோல் தினமும் நாங்கள் எங்களது கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கிறோம் என்று மாணவர்கள் கோரஷாக கூறுகின்றனர். ஆசிரியரால் நல்ல சமுதாயம் உருவாகும் என்பதற்கு இந்த ஆசிரியர்தான் உதாரணம்.