கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவ்வழியே சென்ற செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராதாகிருஷ்ணன்(25) என்ற வாலிபர் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
பூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு
அடுத்தடுத்து மயக்கம்
இதுகுறித்து தகவலறிந்த கிணற்றின் உரிமையாளர் உள்ளிட்ட செல்லியம்பாளையம் கிராம மக்கள், சம்பவ இடத்தில் திரண்டு கிணறு வெட்டும் தொழிலாளியான நொச்சியம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் பாஸ்கர்(22), என்ற வாலிபரை, கிணற்றுக்குள் தவறி விழுந்த ராதாகிருஷ்ணனை காப்பாற்றி மீட்டு வர அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கிணற்றுக்குள் சென்ற பாஸ்கர் நீண்ட நேரம் ஆகியும் கிணற்றை விட்டு மேலே வராததால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து மயக்கம்
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த (ராதாகிருஷ்ணன்-பாஸ்கர்) இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியின் போது, தீயணைப்பு வீரர்களான ராஜ்குமார், தனபால் பால்ராஜ் மற்றும் கிணறு வெட்டும் தொழிலாளியின் மகனான பாஸ்கரும் என 4 பேரும் மயக்கமடைந்து கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
கிணற்றில் இறங்கினர்
இதுகுறித்து போலீசார் மற்றும் பொது மக்கள் மூலம் தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் தாமோதரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற மற்றொரு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி மயங்கிக் கிடந்த ராஜ்குமார், தனபால், பால்ராஜ் மற்றும் பாஸ்கர் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே தீயணைப்புப் படை வீரர் ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீட்பு பணி நடக்கிறது
இதனைத்தொடர்ந்து முதலுதவி சிகிச்சை பெற்ற 2 தீயணைப்பு வீரர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். கிணறு வெட்டும் தொழிலாளியின் மகனான பாஸ்கர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலில் கிணற்றுக்குள் தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் உடல்
இன்னும் கிணற்றிலிருந்து மீட்கப்படவில்லை. பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் திரண்டனர்
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து, சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் சம்பவ இடத்தை தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எப்படி இறந்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற் கட்ட விசாரணையில், கிணற்றை ஆழப் படுத்துவதற்காக இன்று காலை கிணற்றில் வெடி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகளவில் வெடிப் பொருட்களை பயன்படுத்தியதால் ஏற்பட்ட நெடியின் காரணமாக கிணற்றுக்குள் விழுந்த மற்றும் மீட்கச் சென்றவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம், அல்லது கிணற்றில் வெடி வைத்த போது பூமிக்கடியில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையின் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தான் உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும்.