பெரம்பலூர் பாலியல் கொடுமை.. போலீஸ் இப்படி செஞ்சா எப்படி நீதி கிடைக்கும்.. கொதித்த சீமான்
பெரம்பலூர்: பெரம்பலூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்களுக்காக போராடிய நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் அருளை, பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதை திரும்ப பெறவில்லை என போராட்டம் வெடிக்கும் என சீமான் எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டுசென்றதற்காகவும், நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது பொய் வழக்குத் தொடுத்து, சிறைப்படுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பொள்ளாச்சியில் எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய கோரநிகழ்வு வெளிச்சத்திற்கு வந்து, அதற்கான நீதியையே இன்னும் பெறாத சூழ்நிலையில், தற்போது பெரம்பலூரிலும் அதேபோல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் மனவலியைத் தருகிறது.
'ஸ்டெர்லைட் ஆலை' திமுக ஆட்சியில் நிரந்தரமாக மூடப்படும்: முக ஸ்டாலின் உறுதி
காவல்துறை மீது புகார்
இதுதொடர்பாக, தம்பி அருள் காவல் துறைக்குப் புகார் கொடுத்தும், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கியும், பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது இதுவரை வழக்கு எதுவும் பதியப்படவில்லை. இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குச் சாதகமாக தமிழகக் காவல் துறை நடந்துகொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது.
காவல்துறை பொய் வழக்கு
ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் பாலியல் வன்கொடுமைக்கெதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் துறையிடம் புகார் அளித்ததால் புகார்தாரர் மீதே காவல் துறை பொய் வழக்கு தொடுத்துச் சிறைப்படுத்துவது வேறு எங்கும் நடந்திராத பெருங்கொடுமை. இதுபோன்ற நிலையிருந்தால், மக்களுக்கு அரசாங்கத்தின் மீதும் காவல் துறையின் மீதும் எப்படி நம்பிக்கை வரும். சட்டப் போராட்டத்தின்மூலம் அநீதிக்கான நீதியினைப் பெற முடியும் என எவ்வாறு நம்புவார்கள் என்கிற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலிருக்கிறது.
பச்சைத் துரோகம்
பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளைக் காப்பதற்காக, அநீதிக்குத் துணைபோகும் தமிழக அரசின் இச்செயல்கள்மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. இவை யாவும், வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றிவைத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம். இதற்கெதிராகக் கட்சி கடந்து ஜனநாயக ஆற்றல்களும், முற்போக்குச் சக்திகளும் அணிதிரளவேண்டியது தலையாய கடமையாகும்.
அருள் விடுதலை
எனவே, பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கு மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையைப் பரிந்துரைக்க வேண்டுமெனவும், கைதுசெய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மீதான வழக்கைத் திரும்பப்பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்" இவ்வாறு சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.