பாரிவேந்தர் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்.. சடலத்தை நடுக் காட்டில் வீசியதா.. விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
சடலத்தை தூக்கி வீசும் வீடியோ வைரலானதால் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பெரம்பலூர்: எம்பி பாரிவேந்தருக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று நடுக் காட்டில் கொரோனா நோயாளி உடலை வீசி விட்டுச் சென்றதாக கூறப்படும் சர்ச்சை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்கலூர் பகுதியில் எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.. இந்த ஆஸ்பத்திரியில் ஏராளமான புறநோயாளிகளும் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கடந்த 16ம்தேதி சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்துவிட்டார்..
மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது. அதன்படி, அவரது உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு இருங்களூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி காட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே 8 அடிக்கு குழி தோண்டப்பட்டிருந்தது... அங்கு சடலத்தை வீசி எறிந்தனர்.. இப்படி ஒரு வீடியோ வைரலானது.. எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான வெள்ளை கலர் வேன் ஒன்று அந்த காட்டுப்பகுதியில் வந்து நிற்கிறது.. அதில் இருந்து 3 பேர் இறங்குகிறார்கள்.. ஒருவர் ஆஸ்பத்திரி ஊழியர் போல தெரிகிறது.
தலை முதல் கால் வரை முழுக்க பாதுகாப்பு உடையை அணிந்திருக்கிறார். மற்ற இருவரும் லுங்கி அணிந்துள்ளனர்.. ஆனால் முகத்தில் மாஸ்க் கட்டி உள்ளனர். அவர்கள் அந்த வேனில் இருந்து ஒரு சடலத்தை இறக்குகிறார்கள்... பிறகு ஓரிரு நிமிடம் சடலத்தை கையில் பிடித்தபடியே நிற்க, திடீரென ஒரு குரல் கேட்கிறது.. அப்படியே வீசிட்டு போங்க என்று.. இதையடுத்து, அந்த சடலத்தை புதர் பகுதியில் 3 பேரும் தூக்கி வீசுகிறார்கள்.
இறுதியில் மண்ணை போட்டு மூடிவிட்டு போகிறார்கள்.. ஒரு மனித உடலை இப்படி காட்டில் தூக்கி எறியும் வீடியோவை பார்க்க மனம் பதறியது.. பெரும் சர்ச்சையை கிளப்பியது.. தேர்தலுக்கு முன்பாகவே தொகுதியில் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை சம்பாதித்த பாரிவேந்தரை, "எம்பி பாரிவேந்தர் தொகுதிக்கு வரவும்" என்று சொல்லும் அளவுக்கு இந்த சம்பவம் வெடித்தது.
பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி
இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் தந்தது.. அதில், உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உரிய தகவல் தெரிவித்து, பாதுகாப்பு முறைகளை பின்பற்றியே இருங்களூர் அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது... இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இதை பற்றி சொல்லும்போது, "இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மருத்துவபணிகள் இணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது... அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்..
மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் தந்தபிறகு ஓரளவு இந்த பரபரப்பு அடங்கி உள்ளது.. என்றாலும் முறையான விசாரணை நடக்கும் என்றே தெரிகிறது.. ஏற்கனவே சென்னை எஸ்ஆர்எம்-மில் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் அடிக்கடி நடந்து வருகிறது.. இதற்காக ஒரு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.. இப்போது பெரம்பலூர் எஸ்ஆர்எம்மிலும் சடலம் வீசப்பட்டுள்ளது.. என்னதான்தான் நடக்கிறது எஸ்ஆர்எம்மில் என தெரியவில்லை.
ஆனால், நல்ல பெயரை தொகுதியில் மிகவும் கஷ்டப்பட்டு வாங்கி உள்ளார் எம்பி.. கஜா புயலின்போதுகூட, பிள்ளைகளுக்கு காலேஜில் சீட் தந்து ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்தார்.. இந்நிலையில் அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் பாரிவேந்தருக்கு எந்த சிக்கலும் இருக்காது... கவனிப்பாரா?!