அதிமுக, திமுக துரோகமும் நல்லதும் செய்திருக்கிறது.. சுதீஷை தொடர்ந்து விஜய பிரபாகரன் பேச்சால் சலசலப்பு
பெரம்பலூர்: அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேமுதிகவுக்கு நல்லதும் செய்திருக்கிறது; துரோகமும் செய்திருக்கிறது என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேமுதிகவை பொறுத்தவரையில் பாமகவை விட பெரிய கட்சி என்கிற கோதாவில் பேசி வருகிறது.
சொற்ப தொகுதிகள்
ஆனால் அதிமுகவோ, பாமக, பாஜகவுக்கு அடுத்துதான் தேமுதிக என்கிறது. இதனால் 20 தொகுதிகளுக்கும் கீழ்தான் ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பு திட்டவட்டமாக கூறியிருக்கிறது. இதனை தேமுதிக ஏற்கவில்லை.
தனித்து போட்டி?
இதனால் தனித்து போட்டியிட்டும் நிலையை நோக்கி தேமுதிக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை அக்கட்சியின் சுதீஷ் தமது சமூக வலைதள பக்கங்களில் பூடகமாக பதிவிட்டிருந்தார். அதில் நமது முதல்வர் விஜயகாந்த் என குறிப்பிட்டிருந்தார். இதுதான் சர்ச்சையானது.
விஜய பிரபாகரன் பேச்சு
இந்நிலையில் விஜய பிரபாகரன், பெரம்பலூர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பேச்சும் சர்ச்சையாகி உள்ளது. "அ.தி.மு.க., தி.மு.க. இருவரும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். இரண்டு கட்சியும் துரோகமும், நல்லதும் செய்திருக்கிறார்கள். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என சகட்டுமேனிக்கு பேசியிருக்கிறார் விஜயபிரபாகரன்.
தனித்துவிட்டப்படும் தேமுதிக
ஏற்கனவே அதிமுக- திமுகவிடம் 41 தொகுதிகளைக் கேட்கிறோம் என விஜய பிரபாகரன் பேசியது பஞ்சாயத்தை உருவாக்கியது. இந்நிலையில் சுதீஷை தொடர்ந்து விஜயபிரபாகரன் பேசியிருப்பது தேமுதிகவை தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.