காந்தி குடிச்சது ஆட்டுப் பாலு.. பெரம்பலூர் அக்கா விக்குது கழுதைப் பாலு.. சங்கு 50 ரூபாய்தாண்ணே!
Recommended Video
பெரம்பலூர்: சின்ன வயசில நீயென்ன கழுதை பாலை குடித்துவிட்டாயா, இப்படி கத்துறியே என்போம். உண்மையில் கழுதை பால் குடித்தால் நல்ல குரல் வளம் வரும் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விஷயமாகும். ஆனால் கழுதை பால் குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டு என்கின்றனர் அதை விற்பனை செய்பவர்கள்.
பிறக்கும் குழந்தைகளுக்கு என்னதான் தாய்ப்பால் கொடுத்தாலும் ஒரு சங்காவது கழுதை பால் கொடுத்தால்தான் அழும் சப்தம் நன்றாக கேட்கும் என்று சொல்வதை கேட்டுள்ளோம். அந்த காலங்களில் கழுதை பால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.
இந்த பாலை குடித்தால் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் குணமடைவதாக கூறுகின்றனர். முகச் சுருக்கங்களை போக்கும் வல்லமை கொண்டது என்பதால் கழுதை பால் அழகு சாதன பொருட்களை தயாரிக்க உதவி புரிகிறது.
700 கழுதை
பண்டைய எகிப்து ராணு கிளியோபாட்ரா, தனது அழகையும் தோல் இளமையையும் பராமரிக்க கழுதை பாலில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். அவர் ஒரு நாளைக்கு 700 கழுதைகளிடமிருந்து பெறப்பட்ட பாலில் குளிப்பாராம்.
கிருமி நாசினி
தாய்ப்பாலை போல் கழுதை பாலும் தூய்மையானது என்றாலும் அதில் சில பாக்டீரியாக்கள் இருப்பதால் அந்த பாலை பச்சையாக குடிக்கக் கூடாது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். எனினும் இந்த பாலில் ஏராளமான வைட்டமின்களும், கிருமி எதிர்ப்பு சக்திகளும் உள்ளதாக நிரூபணம் ஆகியுள்ளது.
அதிகம்
வெளிநாடுகளில் ஒரு லிட்டர் ரூ. 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அங்கு ஒரு கழுதையின் விலை 80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. கழுதை பால் மூலம் தயாராகும் அழகு சாதன பொருட்களின் விலையும் அதிகமாகவே விற்கப்படுகிறது.
நோய் நொடி அண்டாது
இந்த பாலில் குறைந்த அளவிலான கொழுப்பும் அதிக அளவிலான லாக்டோஸும் இருக்கின்றன. தற்போதிலிருந்தே இந்த பாலை குடித்தால் வயதான காலத்தில் நோய் நொடி இல்லாமல் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
லாபகரமான தொழில்
மாட்டு பாலை காட்டிலும் எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டதால் இது மாட்டுப் பாலை காட்டிலும் சிறந்தது என்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கழுதை பாலை லால்குடி, கீரமங்கலம், தலக்கோட்டை, வாலக்கட்டை ஆகிய ஊர்களுக்கு இரு கழுதைகளுடன் சென்று கழுதை பாலை விற்று வருகிறார். அந்த பால் ஒரு சங்கு ரூ.50 , ரூ 100 என விற்கப்படுகிறது. இதை ஒரு லாபகரமான தொழிலாகவே பலர் செய்து வருகின்றனர்.
மக்கள் முன்பே கறந்து...
பெரம்பலூரை சேர்ந்த பெண் மக்கள் முன்பே பாலை கறந்து குழந்தைகளுக்கு ஊற்றி விடுகிறார். இந்த தொழிலை 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். இதுகுறித்து பால் விற்பனை செய்யும் அந்த பெண் கூறுகையில் கழுதை பால் ஒரு சங்கு 50 ரூபாய்க்கு விற்கிறோம். இளைப்பு வராது, ஜீரண சக்தி ஆகும். மஞ்சள் காமாலை வராது, நாங்கள் தெரு தெருவாக சென்று விற்பனை செய்து வருகிறோம். இரண்டு மூன்று முறை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுத்து பெரியவர்களும் குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றார்.