ஊழலை ஒழிக்கிறேன்... அது பிடிக்காம சிலருக்கு கோபம் வருது... பிரதமர் மோடி சரவெடி!
சில்வஸ்சா: 'மஹாகத் பந்தன்' கூட்டணி என்பது எனக்கு எதிரானது அல்ல. இந்திய மக்களுக்கு எதிரானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஹஜிரா நகரில் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்து வழங்கும் "எல் அண்ட் டி" நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இங்கு, கே 9 வஜ்ரா - 155 எம்.எம்./ 52 காலிபர் திறன் கொண்ட டாங்குகள், அதிநவீன துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக, கடந்த 2017-ல் ரூ. 4,500 கோடிக்கான ஒப்பந்தத்தை "எல் அண்ட் டி" நிறுவனம் பெற்றிருந்தது.
ஊழலை தடுப்பதால் கோபம்
ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்ட பிறகு சில்வஸ்சாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நான் தடுப்பத்தால் சிலர் கோபப்படுகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் இப்போது 'மஹாகத் பந்தன்' என்றழைக்கப்படும் ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
பங்கு பேரம் தொடங்கியது
'மஹாகத் பந்தன்' கூட்டணி என்பது மோடிக்கு எதிரானது அல்ல. இந்திய மக்களுக்கு எதிரானது. இப்போதும் கூட, அவர்கள் முழு கூட்டணியாக ஒன்று சேரவில்லை. ஆனால், தங்களுடைய பங்குகள் குறித்த பேரத்தை தொடங்கி விட்டனர்.
கூட்டணி குறித்து விமர்சனம்
தங்களை காப்பாற்றி கொள்வதற்காக கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். அதேசமயம், நாட்டின் வளர்ச்சிக்காக நான் இங்கு இருக்கிறேன். மேம்பாடு என்பது எங்களின் ஒரே குறிக்கோள்.
சுமார் 1.25 கோடி வீடுகள்
முந்தைய அரசால் 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்ட முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 130 கோடி இந்திய மக்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம்.