தேன் கூட்டைக் கலைக்கவே வாகனத்திற்கு தீவைத்தோம்.. போலீஸ் பரபரப்பு சாட்சியம்!
Recommended Video
மதுரை: ஜல்லிகட்டு போராட்டத்தின் போது தேன் கூட்டைக் கலைப்பதற்காகவே வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான இறுதிகட்ட விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜல்லிகட்டு போராட்ட குழு விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் விசாரணை தொடர்பான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியிலிருந்து...
முடிந்தது விசாரணை
மதுரையில் நடைபெற்ற விசாரணையானது முடிவடைந்தது. 1018 பேரிடம் விசாரிக்க தீர்மானித்து இருந்தோம். இதில் 257 பேர் சம்மன் அளித்தும் விசாரணைக்கு வரவில்லை. 512 ஒரே மாதிரியான விளக்கங்களை கொடுத்ததால் நாங்கள் ஏற்றுகொள்ளவில்லை. புகைப்படங்கள் ஆயிரத்திற்கும் மேல் வந்துள்ளது. சிடி 50 க்கும் மேல் வந்துள்ளது. இவற்றை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்படும். 4 மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
போலீஸுக்கு மக்கள் ஆதரவு
அலங்காநல்லூரை பொறுத்தவரை அதிகமானோர் காவல்துறை செய்தது சரி என்றே விளக்கம் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் , சமூகஆர்வலர்கள் என அதிகமானோர் காவல்துறைக்கு ஆதரவாக பேசியுள்ளனர். சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் கலவரம் நடைபெறும் போது வந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
தூண்டி விட்டது யார்
22 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வந்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போராடியதாகவும், நாங்கள் நடத்த நினைத்த போதும், போராட்டத்திற்கு வந்தவர்கள் மக்களை திசை திருப்பினர். எங்கள் ஊர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவிடாமல் தடுக்க அவர்கள் யார் என கேட்கின்றனர். காவல்துறை தடி அடி என யாரும் சொல்லவில்லை. போராட்டகாரர்களை கலைக்க காவல்துறை என்ன தான் செய்யும் என கேட்கின்றனர்.
முகிலன் தூண்டி விட்டாராம்
பொதுமக்கள் கலைந்து சென்றும் ஏன் சிலர் கலைந்து செல்லவில்லை என பொதுமக்கள் கேட்கின்றனர். SFI, கம்யூனிஸ்ட், திமுக, மாணவர்கள் இயக்கங்கள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக விசாரணையில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். புல்லட் மகேஸ்வரி , முகிலன் உள்ளிட்ட சிலர் போராட்டத்தை திசை திருப்பி மக்களை தூண்டிவிட்டனர். மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுகொண்டுள்ளோம்.
வாகனங்கள் எரிக்கப்பட்ட காரணம்
சென்னையில் இன்னும் 16 பேரிடம் மனு கொடுத்தவர்களிடம் விசாரிக்க உள்ளோம். மார்ச் மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். சென்னையில் வாகனங்களுக்கு காவல்துறை தீ வைத்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தவர்கள், தேன்கூடு மீது கல் எறிந்த போது, குழவிகள் மக்களை கொட்ட வந்ததாகவும் , அதனை தடுக்க காவல்துறையினர் தீபந்தத்தை வைத்து விரட்டியதாக சாட்சியம் அளித்துள்ளனர் என்றார் ராஜேஸ்வரன்
கடந்த 4.10.2017 அன்று ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணை தொடங்கி நேற்று முடிவடைந்துள்ளது.